தூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா
தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என எச்.ராஜா கூறியுள்ளார்
சிவகங்கை: சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரப்போகிறது என்று கூறி எச். ராஜா அலற விட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தோல்வி அடைந்தார்.
இப்போது தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
புகார் மனு
கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன என்றும், அந்த குறைகளை எடுத்து சொல்லியும், தேர்தல் அதிகாரிகள் பரிசீலனையே செய்யவில்லை என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக பணம் தந்தது என்றும் தமிழிசை புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
இந்நிலையில், திருச்செந்தூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எச்.ராஜா பேசியபோது சொன்னதாவது: மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. மத்திய சென்னை, சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி.
இந்தி திணிப்பு
தமிழகத்தில் இந்தி திணிப்பு என்று திமுகவினர் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர்கல்வி இல்லையே ஏன்? திரும்பவும் இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் விமர்சித்தால், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
ப.சிதம்பரம்
எச். ராஜா இந்த 4 தொகுதிகளை குறிப்பிட்டு சொல்ல என்ன காரணம்? சிவகங்கை அவரது சொந்த தொகுதி. அங்கு இவருக்கு பிரதான எதிரியே ப சிதம்பரம்தான். இந்த முறை தேர்தலில் கூட கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
விமர்சனம்
எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனின் ஊழல்களை பற்றி விமர்சித்து வருபவர் எச். ராஜா. இப்போது ஐஎன்எக்ஸ் வழக்கின் விசாரணை வளையத்தில் இவர்கள் இருவருமே உள்ளனர்.
ஆ.ராசா
அது மட்டுமில்லாமல் திமுக சம்பந்தப்பட்ட அதாவது கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா சம்பந்தப்பட்ட பிஎஸ்என்எல் வழக்கு, 2ஜி வழக்கு போன்றவை திரும்பவும் விசாரிக்கப்பட உள்ளது. அதனால்தான் எச். ராஜா நீலகிரி, சிவகங்கை, மத்திய சென்னை, தூத்துக்குடி தொகுதிகளுக்கு தேர்தல் வரப்போகிறது என்று சொல்வதாக தெரிகிறது.