கண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 06.09.2019 காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியை தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தலைவர், தலைமையாசிரியர், திரு.ஆ. பீட்டர்ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முகமதுசமீம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் சரவணக்குமார் அவர்கள் மற்றும் காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் மாணவர்கள் ஃபர் துணி, பஞ்சு, விளக்கு, பூக்கள், உல்லன்நூல், பனிக்கூழ்குச்சி, வளையல், அலங்கார பாசிகள், கூடைவயர், கிளிவயர், மணிகள், காகிதம், வெல்வட்துணி போன்ற பொருட்கள் மூலம் கரடிபொம்மை , மலர்குவளை, பானையில் ஓவியம் வரைதல், சுவர் அலங்காரப் பொருட்கள், டால்பின், கிளி, மயில் வடிவ அகல் விளக்கு, குஷன், நிலைமாலை உருவாக்குதல் போன்ற பல்வேறு பொருட்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்கள், கண்ணாடி பாட்டில் மூலம் பூஞ்சாடி போன்ற பல்வேறு பொருட்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் மாணவர்கள் இயற்கை வனம், விலங்குகள், தலைவர்கள், பறவைகள் ஆகியவைகளை கண்ணாடி ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி அவர்கள், கண்காட்சியை பார்வையிடும் போது , மாணவர்களிடம் பொருட்கள் ஒவ்வொன்றின் சந்தை மதிப்பையும் அதற்கான விற்பனை விலையையும் கேட்டு, மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.. இந்நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் திருமதி. உமா அவர்கள் நன்றி கூறினார்.
இக்கண்காட்சியை ஆசிரியர்கள் திருமதி. சரஸ்வதி அவர்கள், திருமதி. நீலா அவர்கள் மற்றும் திருமதி. சிவசங்கரி அவர்கள் ஒருங்கமைத்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர்கள் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மற்றும் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்கள்.