கீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு
Recommended Video
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நூற்றுக்கணக்கான பழம்பொருள்கள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இந்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரீகம் குறித்த அகழாய்வு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில் முதலாம், மற்றும் இரண்டாம் ஆண்டுகள் நடைபெற்ற அகழ்வாய்வுக்கு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமை ஏற்றிருந்தார். அப்போது கண்டெடுக்கப்பட்ட இரு பொருட்களை அமெரிக்காவில் கார்பன் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டது.
அரிய வகை பொருட்கள்
அந்த சோதனையில் அந்த பொருள்கள் மூலம் கீழடி நாகரீகம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான நகர, நாகரீகம் எனத் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற அகழ்வாய்வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நமது முன்னோர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2,500 ஆண்டுகள் பழமையானது
அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் சிற்பம், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சில பொருட்களை கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பியிருந்தால் தமிழர்களின் நாகரீகம் 2500 ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல அதைவிடவும் பழமையானது என்பது நிருபணமாகியிருக்கும்.
தமிழர்களின் வரலாறு
இதன்மூலம் தமிழர்களின் புதிய வரலாறு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, கண்காணிப்பாளராக ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். தமிழர்களின் நாகரீகம் மிகப் பழமையானது என்று தெரிய வந்த நிலையில் மத்திய அரசு இந்த அகல்வாய்வை நிறுத்த உத்தரவிட்டது. பின்னர் மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பியதன் காரணமாக மீண்டும் அகழ்வாய்வு நடைபெற்றது. அதிலும் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன.
ஐந்தாம் கட்ட அகழாய்வு
பின்னர் 3 ஆண்டுகள் அகழ்வாய்வு நடத்தியதோடு இந்த திட்டத்தை மத்திய அரசு கைகழுவியது. பின்னர் மக்களின் அழுத்தம் காரணமாக 4ம் கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டது. இப்போது நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வினையும் தமிழக தொல்லியல்துறை தான் நடத்தி வருகிறது. ஐந்தாம் கட்ட அகழாய்வுக்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இரட்டைச் சுவர்கள்
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் துவக்கிவைத்தார். இந்த ஆய்வில் பழங்கால செங்கற்சுவர்கள் கண்டறியப்பட்டன. இவை ஏற்கெனவே கிடைத்த சுவர்களின் தொடர்ச்சியாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இது மிக நீளமான செங்கல் சுவராக இருந்தது. கடந்த மாதம் 25ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுவர் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் கருவி
தொடர்ச்சியாக நடந்து வரும் அகழ்வாய்வில் மேலும் ஒரு பழங்கால சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு பாசிமணிகள், சுடுமண் பானைகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் ஆய்வில் முதன் முறையாக ஜிபிஎஸ் (GPS) கருவி பயன்படுத்தப்பட உள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.