சிவகங்கையில் தம்பதி மது அருந்திய போது தகராறு.. செல்லம்மாளை கொலை செய்த வெள்ளைச்சாமி
சிவகங்கை: சிவகங்கை அருகே கணவன் மனைவி இருவரும் வீட்டில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி என்ற ஊரில் வசித்து வந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி செல்லம்மாள். வெள்ளைச்சாமி கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
அவரது மனைவியும் கணவரோடு சேர்ந்து கட்டட சித்தாள் வேலை செய்து வந்தனர். வழக்கமாக இருவரும் ஒன்றாக வேலை முடித்து திரும்பும் போது மதுக்கடையில் இருவரும் சேர்ந்து மது வாங்கி வந்து வீட்டில் குடிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு மாதவன் என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். தன் தாய் தந்தை இருவரும் வீட்டில் மது அருந்தி அடிக்கடி சண்டை போடுவதால் அருகில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்கு சென்று விடுவார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் இருக்கும் பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வெள்ளைச்சாமி தனது மனைவியை தடியால் தலையில் அடித்ததால் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் வெள்ளைச்சாமி தனது ஊரின் அருகில் உள்ள பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனை அடுத்து போலீசார் வெள்ளச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.