முன்னாள் நீதிபதிக்கே இது தான் நிலை என்றால்... மக்களுக்கு...? சிவகங்கையில் என்ன நடக்கிறது..?
சிவகங்கை: ஆயிரக்கணக்கான வழக்குகளில் நீதி வழங்கிய நீதியரசரே இன்று நீதி கேட்டு காவல் நிலையம் முன்பாக போராட வேண்டிய அவல நிலை சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலையை பற்றி எண்ணிபார்க்கவே தேவையில்லை எனக் கூறுகின்றனர் பூலாங்குறிச்சி கிராமமக்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு தேசிய அளவில் நீதித்துறை வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
என் பேத்தியின் ஓவியங்களே அழுத்தங்களை குறைக்கிறது.. இடைவிடாத கொரோனா பற்றி கேரளா அமைச்சர் ஷைலஜா
விவசாயம் செய்கிறார்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 11 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் செல்வம். இவர் தனது ஓய்வுக்காலத்தை சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கழித்து வருகிறார். விவசாய வேலைகளை கவனிப்பதும் கல்வியை பற்றி கிராம மாணவர்கள், இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இவரது ஓய்வுகால பணியாக இருந்து வருகிறது. அரசாங்கம் அளித்த இல்லம் உதவியாளர் என அனைத்தையும் உதறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றவர் செல்வம்.
மதுபாட்டில்கள்
தனது ஊரான பூலாங்குறிச்சி சுற்று வட்டார கோயில்களில் மதுபாட்டில்கள் கிடப்பதாகவும், கோயில் வளாகங்களில் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார். மேலும், சமூக விரோத செயலை கண்டித்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தையும் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் காவல்துறை தரப்பில் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிராம மக்கள்
புகார் அளிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது பூலாங்குறிச்சி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கிராமமக்களுடன் காவல்நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தினார். ஆயிரக்கணக்கான வழக்குகளில் நீதி வழங்கிய நீதியரசருக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலையை பற்றி விவரிக்க தேவையில்லை.
என்ன பயன்?
இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நீதிபதி செல்வம், தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 20 நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் பிறகு எதற்கு காவல் நிலையம் இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை உங்கள் நண்பன் என கூறிக்கொண்டால் மட்டும் போதாது அதற்கேற்ப செயல்பட வேண்டும் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.