சுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள்
கொரோனா தொற்று காலமாக இருப்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு சுதந்திர தின விழா போட்டிகளை ஆன்லைன் மூலம் நடத்தியுள்ளது
தேவகோட்டை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தேசியக்கொடி பட்டொளி விசி பறக்கிறது.... மயில் ஒன்று தேசியக்கொடிக்கு சல்யூட் வைக்கிறது. பள்ளிக்கு போக முடியாவிட்டாலும் ஓவியங்கள் மூலம் தேசியக்கொடி ஏற்றி வைத்து சல்யூட் வைத்துள்ளனர் மாணவர்கள். ஆன்லைன் மூலம் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய போட்டியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனாவால் பள்ளி திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு அவர்களை வீட்டிலிருந்தே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்றவும் ஆசிரியர்கள் ஊக்குவித்தனர்.
போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களின் படைப்புகளை வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துமீனாள்,செல்வமீனாள்,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.
மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும்.
ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களான ராஜேஸ்வரி,சண்முகம்,புகழேந்தி,முகேஷ் ,திவ்யஸ்ரீ,முத்தய்யன் , பிரஜித்,வெங்கட்ராமன்,அட்சயா,ஆகாஷ்,ராகேஷ் ஓவியா, ஜோயல் ரொனால்ட்,ஈஸ்வரன், ஸ்வேதா,பிரதிக்சா,அம்முஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
சுதந்திர தேசத்தின் சூப்பர் குழந்தை.. ஒரே நிமிடத்தில்... 150 லோகோக்களை சொல்லி.. சாதித்த கெவின்!
இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும் ,சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் லாக்டவுன் காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.