திமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: பிரசாந்த் கிஷோர் மூலம் திமுக எப்படி சர்வே நடத்துகிறதோ அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் சர்வே நடத்தப்பட்டு வருவதாக சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் மேலிட ஒப்புதலின் பேரில் இந்த சர்வே நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் சர்வேயில் கிடைக்கும் டேட்டாவை அடிப்படையாக வைத்து திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..?
கூட்டணி பேச்சு
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சீட்கள் ஒதுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த கால தேர்தல்களை போல் இல்லாமல் இந்த முறை குறைந்த எண்ணிக்கையில் தான் காங்கிரசுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது. அதுவும் பிரசாந்த் கிஷோர் கைகாட்டும் தொகுதிகளில் மட்டுமே திமுக வாய்ப்பு தரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் சர்வே
இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில், பிரசாந்த் கிஷோர் அளிக்கும் டேட்டாவுடன் திமுக பேச்சுவார்த்தைக்கு வந்தால் தாங்களும் சயிண்டிஃபிக் டேட்டாவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என அவர் கூறியிருக்கிறார். இன்னும் சர்வே முடிவுகள் மற்றும் புள்ளியியல் விவரங்கள் தங்கள் கைக்கு வந்து சேரவில்லை என்றும் டேட்டா கிடைத்தவுடன் தான் மேலும் இதுபற்றி தன்னால் பேச முடியும் எனவும் கூறியிருக்கிறார்.
யார் தலைவர்
கூட்டணி விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள இந்தக் கருத்தை திமுக அதிர்ச்சியுடனும், கோபத்துடனும் பார்க்கிறது. கட்சியின் மாநிலத் தலைவர் பேச வேண்டிய கூட்டணி விவகாரத்தை போகிற போக்கில் ஒரு எம்.பி. பேட்டியில் எப்படி பேசலாம் என கொந்தளிக்கிறது. மேலும், கார்த்தி சிதம்பரம் திமுகவை மிரட்டப் பார்க்கிறாரா எனவும் அறிவாலயம் தரப்பு பாய்ந்துள்ளது.
கே.எஸ்.அழகிரி
கார்த்தி சிதம்பரத்தின் இந்தக் கருத்தால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். திமுகவுடன் சுமூகமான உறவை பேணி வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் கருத்து கலகத்தை மூட்டும் வகையில் இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் வேதனைத் தெரிவித்திருக்கிறார்.