"சுத்த பொய்.." தமிழக இளைஞர் காங்கிரஸில் 12 லட்சம் பேரா! நானே நம்ப மாட்டேன்.. கார்த்தி சிதம்பரம் பரபர
சிவகங்கை: காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் குறித்து சில பரபர கருத்துகளைக் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் கடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பல நேரங்களில் இவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை கிளப்புவதாகவே இருந்து உள்ளது. இதற்கிடையே இளைஞர் காங்கிரஸ் குறித்து இவர் கூறிய கருத்துகளைக் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து இரண்டு முறை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுந்தரத்தை, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரவீன் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதை மேடையில் இருந்த சிவகங்கை எம்பி கார்த்திக் ப சிதம்பரம் தட்டிக் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுத்தப் பொய்
இதன் பின்னர் மேடையில் பேசிய கார்த்தி சிதம்பரம், "தமிழக காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் பிரிவில் மட்டும் 12 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது சுத்தப் பொய். இதை என்ன ஆனாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. மற்ற கட்சிகளும் கூட உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இது போல் தான் பொய் கூறி வருகின்றனர். இளைஞர் காங்கிரஸில் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர் இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
தொண்டர்கள்
இந்தக் கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரவீன் பேச்சைக் கண்டிக்கவில்லை என்று கூறி, காரைக்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகநாத் உள்ளிட்ட சில தலைவர்கள் காங்கிரஸ் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக கார்த்திக் சிதம்பரம் விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில், உள்ளூர் கோஷ்டி பூசலையே அவர் தடுக்காமல் இருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று அக்கட்சி தொண்டர்கள் புலம்பிச் சென்றனர்.
ருபி மனோகரன் விவகாரம்
முன்னதாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நடந்த அரசு விழாவில் பேசிய கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் ரூபி மனோகரனை கட்சியை விட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு சஸ்பெண்ட் செய்தது தவறானது.. அந்த குழுவிற்கு அதற்கான அதிகாரமே இல்லை. இந்த விவகாரத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி சுமுகமாக உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணியே மிகப் பெரிய அளவில் வெல்லும்.
அதிமுக
தமிழ்நாட்டில் பாஜக வளர்வதைப் போலத் தவறான பிம்பம் உருவாக்கப்படுகிறது. அதில் உண்மை இல்லை. அதிமுகவில் இருக்கும் உட்கட்சி பூசல் அனைவருக்கும் தெரியும், அதை முதலில் அவர்கள் பேசி தீர்க்கட்டும். அதன் பின்னர் மெகா கூட்டணி அமைப்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்கட்டும்" என்று கூறி இருந்தார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி நியமன பதவி தான் என்றும் அதை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் கூட அவர் கூறினார்.
என்ன நடந்தது
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியும் கூட போராட்டம் முடியவில்லை. அப்போது அதில் திடீரென வன்முறை ஏற்படவே, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் பலரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.