நெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..!
சிவகங்கை: சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடந்த ஒரு மாதத்தில் 122 கோரிக்கை மனுக்கள் மீது தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட நூலிழையில் தலைமையிடம் இருந்து சீட் பெற்று தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தி சிதம்பரம். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் தலைமை, சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தது.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டது, சிதம்பரத்தின் மகனுக்கு சீட் இல்லையாம் என ஆளாளுக்கு ஆருடங்கள் கூறத் தொடங்கினர். ஆனால் அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சிவகங்கை தொகுதியில் சீட்டும் பெற்றும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும் செய்தார் கார்த்தி சிதமபரம்.
சரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தந்தை ப.சிதம்பரத்தை வெளியே கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்கள் உண்மையிலேயே ப.சிதம்பரம் குடும்பத்துக்கு நெருக்கடியாக காலக் கட்டம்தான்.
இந்தச்சூழலிலும், தன்னை வெற்றிபெற வைத்த தொகுதி மக்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றத் தவறவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொகுதி மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 122 மனுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் அதன் விவரத்தை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி வங்கிப் பரிந்துரை வரை கடிதம் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலும், தேக்க நிலையில் உள்ள முன் அனுப்பிய கோரிக்கை கடிதங்கள் மீதும் எம்.பி.கவனம் செலுத்தி வருவதாக கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.