தமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்
சிவகங்கை: தமிழ் நாகரீகத்தின் தாய்மடியாக போற்றப்படும் கீழடிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழாய்வில் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாடு மற்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்னும் சில நாட்களில் நிறைவுபெற உள்ள நிலையில், தொல்லியல் ஆர்வலர்களும் பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அகழாய்வு நடைபெறும் இடத்தை பார்க்க ஆர்வமுடன் குவிந்து வருகிறார்கள்.
முன்னதாக அதிக அளவு மக்கள் குவிந்து வரும் காரணத்தால் தொல்லியல் ஆய்வு பாதிக்கப்படுவதாக அங்கு பணியாற்றுபவர்கள் புகார் அளித்தனர்.
22 குழிகளை பார்க்க அனுமதியில்லை
இதன் காரணமாக அகழாய்வு பணியை பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் 32 குழிகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிடலாம். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட அனுமதியில்லை என கட்டுப்பாடுகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சுற்றுலாத்தளமாகிய கீழடி
இந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி, விடுமுறை நாளான இன்று ஏரளமான மக்கள் ஆர்வமுடன் தமிழ் நாகரீகத்தின் தாய்மடியாக போற்றப்படும் கீழடிக்கு வருகை தருகிறார்கள். இதனால் சிறந்த சுற்றுலாத்தளமாக உருவெடுத்துள்ளது கீழடி.
கட்டிட கலையில் சிறந்தவர்கள்
வரலாற்று புத்தகங்களில் சிந்து சமவெளி நாகரீகத்தை படித்த மக்கள் இனி வைகை கரை நாகரீகத்தையும் படிக்க போகிறார்கள். தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிட கலையில் சிறந்த விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு அங்குள்ள உள்ள நீண்ட சுவர்கள் உறை கிணறுகள ஆதாரமாக கிடைத்துள்ளது.
நெசவுத்தொழில்
அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு விளையாட்டுகள், விலங்கு வேட்டைகள், அசைவ உணவு பழக்கங்கள் அந்த காலத்தில இருந்ததற்கான ஆதாரங்களக காளை, எருமை, வெள்ளாடு உள்பட பல்வேறு விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளது. மேலும் நெசவுத்தொழிலில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. மேலும் செல்வசெழிப்பிலும், கலை நேர்த்தியிலும் சிறந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மொத்தம் கீழடியில் 110 ஏக்கர் நிலம் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டி உள்ளது