பூதாகரமாகும் எச்ஐவி ரத்த பரிமாற்றம்.. மானாமதுரையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் 14 வயது சிறுமிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தியதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
எய்ட்ஸ் எனும் நோய் எச்ஐவி எனும் வைரஸ் தொற்றால் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, எச்ஐவி ரத்தத்தை வேறு ஒருவருக்கு ஏற்றுதல், எச்ஐவி பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றால் வரும் என்பது ஊரறிந்த உண்மை.
தமிழக அரசும் பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைகளையும், கருத்தடை மாத்திரைகளையும் பயன்படுத்துமாறு விளம்பரம் செய்கிறது. ஆனால் இதெல்லாம் இல்லாமல் விருதுநகர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் பரவியதற்கு அரசு முழு காரணமாகிவிட்டது.
சர்ச்சை
ரத்த சோகையால் சாத்தூர் மருத்துவமனைக்கு ரத்தம் ஏற்றிக் கொள்ள சென்ற கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை வங்கி ஊழியர்கள் ஏற்றிவிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சென்னை மாங்காடு அருகே உள்ள கர்ப்பிணிக்கும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் எச்ஐவி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.
எச்ஐவி
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் தனக்கு 2014-ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட ரத்தம் மூலம் எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக புகார் கூறியுள்ளார். ஆனால் சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பூங்கொடி கூறுகையில் மேட்டூரை சேரந்த பெண்ணுக்கு ரத்த பரிமாற்றத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அறுவை சிகிச்சை
ரத்ததானம் செய்த நபருக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மானாமதுரையிலிருந்து ஒரு சம்பவம் வெளியே வந்துள்ளது. மானாமதுரையைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அடிக்கடி மூக்கில் ரத்தம் வெளியேறியதை சரி செய்ய அவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொற்று இருப்பது
இதைத் தொடர்ந்து அவருக்கு 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு மூக்கில் இருந்து ரத்தம் வழிதல் நிற்காததாலும் உடலில் ஆங்காங்கே புண்கள் ஏற்பட்டதாலும் கடந்த 2010-ஆம் ஆண்டு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந் சிறுமிக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது.
தீர்ப்பு
எச்ஐவி பாதிப்புகளால் கடும் அவதியுடன் தற்போது இளம்பெண்ணாக உள்ள அவரை அடுத்தவர்கள் கிண்டல், கேலி செய்ததால் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அவரது பெற்றோர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டு தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.