புதியவர்களுக்கு லேப்டாப் வழங்க மாட்டேன்.. எம்எல்ஏவை வெள்ளைத்தாளில் கையெழுத்திட வைத்த அரசு மாணவர்கள்
மானாமதுரை: பழைய மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் புதிய மாணவர்களுக்கு வழங்க மாட்டேன் என மானாமதுரை சட்டசபை உறுப்பினரை வெள்ளைத்தாளில் எழுதி வைத்து கையெழுத்திட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் தொடங்கி வைத்தார். அவர் உயிரோடு இருக்கும் வரை இந்த திட்டம் சரியாக செயல்பட்டது.
ஆனால் தற்போது மாணவர்கள் லேப்டாப் வழங்கவில்லை என கூறி ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 2017-2018-ஆம் ஆண்டில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படவில்லை.
விழுப்பும் அரசு பள்ளியில் பாஜக கொடி கலரில் பெஞ்ச்- பொதுமக்கள் கொந்தளிப்பால் அகற்றம்!
மானாமதுரை
இதை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மானாமதுரையில் 2018- 2019, 2019-2020 ஆகிய கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு நேற்றைய தினம் லேப்டாப் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் மானாமதுரை சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன் லேப்டாப்களை வழங்கினார்.
காரை மறித்து போராட்டம்
இந்த விழாவுக்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்த விழா ரத்து செய்யப்பட்டது. எனினும் கொம்புக்காரனேந்தல் அரசு பள்ளியில் அதிமுக எம்எல்ஏ நாகராஜன் லேப்டாப்களை வழங்கினார். இதுகுறித்து தகவலறிந்த கட்டிகுளம் கிராம மாணவர்கள் எம்எல்ஏவின் காரை மறித்து போராட்டம் நடத்தினர்.
கையெழுத்திட்டு
போலீஸார் சமாதான பேச்சு நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து எம்எல்ஏ நாகராஜன் 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் அடுத்த கல்வியாண்டில் படித்த (2018-19, 2019-20) மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கமாட்டேன் என வெள்ளை பேப்பரில் எழுதி பச்சை மை பேனாவால் கையெழுத்து இட்டு மாணவர்களிடம் வழங்கினார்.
கோபம்
ஆளும் கட்சி எம்எல்ஏவிடம் மாணவர்கள் வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு என அமைச்சர் செங்கோட்டையனிடம் மாணவர்கள் பொங்கி எழுந்தபோது விரைவில் லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் சமாதானம் கூறினார். ஆனால் மாணவர்களோ இதையேதான் சார் 2 வருஷமா சொல்றீங்க என கோபத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.