''தி.மு.க. ஆட்சியில் மீண்டும் சமத்துவபுரம் தொடங்குவோம்''... மு.க.ஸ்டாலின் உறுதி!
சிவகங்கை: சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதல்வர் பழனிசாமி என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதிமுக அரசு தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார் .
தேர்தல் களம்
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரம் அமைத்து தரப்படும். கருணாநிதி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் என்றால் அதை அதிமுக ஆட்சி நிறுத்திவிடும்.
முதல்வர் கொச்சைப்படுத்தினார்
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியவர்தான் முதல்வர் பழனிசாமி. விவசாயத்திற்கு முக்கியமான முல்லைபெரியாறு திட்டம் சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். தமிழர்களின் பெருமைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசுடன் கூட்டு வைத்துள்ளது அதிமுக அரசு. சிவகங்கை அமைச்சரை நான் பலமுறை சட்டப்பேரவையில் தேடி பார்ப்பேன், ஆனால் கிடைக்க மாட்டார்.
நாடகம் நடத்துகிறார்
எதுவும் செய்யாததுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெரிய சாதனை. மக்களை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எந்த கவலையும் இல்லை. நீட் தேர்வு, 7 பேர் விடுதலை , விவசாயிகள் , சிறுபான்மை ஆகிய பல்வேறு விவகாரங்களில் முதல்வர் மக்களிடம் நாடகம் நடத்தி வருகிறார் என்று முக ஸ்டாலின் கூறினார்.