கலர் கலராக கோட், தொப்பி போட்டு கொள்கிறார்.. இதுதான் மோடி செய்த சாதனை.. கலாய்க்கும் ஸ்டாலின்
சிவகங்கை கிராம சபை கூட்டத்தில் பிரதமரை மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.
சிவகங்கை: "நான் கேட்கிறேன்... என்ன பெரிய சாதனை மோடி செய்து விட்டார்? எந்தெந்த ஊருக்கு போகிறாரோ, அந்த ஊருக்கு ஏற்ற மாதிரி கலர் கலராக கோட்டு போட்டுக் கொள்வார். ஆனால், இதைவிட வேடிக்கை என்னவென்றால் கலர் கலராக தொப்பி அணிந்துகொள்வதுதான்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிறார். மக்களிடம் நேரிடையாகவே சென்று அவர்களின் குறைகளை கேட்டு வந்து கொண்டிருக்கிறார். கூடவே அதிமுக, பாஜக கட்சிகளையும் விமர்சித்து வருகிறார்.
நேற்றும்கூட சிவகங்கை கீழடி கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை பற்றி நீண்ட நேரம் தாக்கி பேசினார். இங்கிருக்கும் அதிமுகவைவிட மத்தியில் உள்ள பாஜக அரசை குறிப்பாக மோடியைதான் மு.க.ஸ்டாலின் குறி வைத்து பேசி வருகிறார். நேற்று மோடி நெடி கொஞ்சம் அதிகமாகவே அவரது பேச்சில் தெரிந்தது.
நிதி வேண்டாமா?
"இப்போ எதுக்கு மோடி மதுரைக்கு வந்து போகணும். இப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவா? ஆட்சிக்கு வந்து நான்கரை வருஷம் ஆகிவிட்டது. டெல்லியில் இருந்து நடந்து வந்திருந்தாகூட 5 வருஷம் ஆகியிருக்காதே. அடிக்கல் மட்டும் போதுமா? நிதி ஒதுக்க வேண்டாமா?
அடிக்கல் போதுமா?
இப்போது கூட இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்களே, அதில் இத்தனை கோடி ஒதுக்கி உள்ளோம் என்றார்களா? அதுவும் இல்லை. அடிக்கல் நாட்ட வருவதற்கு 2 நாள் முன்பு, "தேர்தலின்போது தந்த வாக்குறுதிகளை தமிழ்நாட்டுக்கு செய்தாரா? இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்" ஒரு பொதுக்கூட்டத்தில் சொல்லியிருந்தேன். ஆனால், வந்தார், அடிக்கல் நாட்டினார், சென்றுவிட்டார். இதுவரைக்கும் பதில் சொல்லவில்லை.
ஸ்மார்ட் சிட்டி
தமிழ்நாட்டில் 11 மாநகராட்சிகளை தேர்ந்தெடுத்து ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற போறோம்னு அறிவித்தார். இதுவரைக்கும் ஒரு சிட்டிகூட ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படவில்லை. என்ன பெரிய சாதனையை செய்துவிட்டார்?
கலர் கலர் தொப்பி
என்னை பொறுத்தவரையில் அவரது சாதனை என்னவென்றால், எந்தெந்த ஊருக்கு போகிறாரோ அந்த ஊருக்கு ஏத்த மாதிரி கலர் கலரா கோட்டு போட்டு கொள்வார், இதைவிட வேடிக்கை கலர் கலர் தொப்பி போட்டு கொள்வதுதான். மக்கள் தலையில் குல்லா போடுவதற்கான ஒரு ஏமாற்று வேலைதான் இதெல்லாம். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப் போகின்றது. அப்படி வரப்போகின்ற தேர்தலையும் நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.