எச்.ராஜான்னு ஒருத்தர்.. நல்லதே பேசியது இல்லை.. மல்லாக்க படுத்து எச்சில் துப்புகிறார்..கருணாஸ் சுளீர்
பெரியாரை விமர்சித்த பாஜகவுக்கு கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
சிவகங்கை: "பாஜக கட்சியில் ஹெச்.ராஜான்னு ஒரு மனுசன் இருக்கிறார்.. அவரை தெரியுமா? அவர் என்னைக்குமே நல்லது பேசியது கிடையாது.. ஆனா ஒரு தேசிய கட்சி இப்படி தரம் தாழ்ந்து அரசியல் செய்யக்கூடாது.. அது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலை துப்பிக் கொள்வதுபோல உள்ளது " என்று எம்எல்ஏ கருணாஸ் பாஜகவையும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 46-வது ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்த நிலையில், பாஜக திடீரென பெரியாரை பற்றி ஒரு சர்ச்சை ட்வீட் போட்டது.
ஆனால், எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், உடனே அதை நீக்கிவிட்டது. எனினும் தமிழக தலைவர்கள் அதற்கான கண்டனங்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், திருவாடனை எம்எல்ஏ நடிகர் கருணாஸும் தமிழக பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் கருணாஸ் உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். அதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கருணாஸ் சொன்னதாவது:
"பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை... அண்ணா இல்லை என்றால் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை. இப்படித்தான் நமது வரலாறு. அப்படி இருக்கும்போது இந்த மண்ணில் திராவிட கொள்கைகளையும், திராவிட இயக்கங்களையும், சுயமரியாதைகளையும், பொதுவுடமை கொள்கைகளையும் வளர்த்த, பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளையும் பெற்று தந்த ஒரு மனிதனை அரசியலுக்காக பாஜக தரம் தாழ்த்தி பேசுவது... மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலை துப்பிக் கொள்வதுபோல உள்ளது.
நாராயணப்பா தாத்தாவிடம் கவுடாவா? என கேள்வி கேட்ட ஸ்டாலின்... சர்ச்சையாக்கப்படும் வீடியோ
ஒரு தேசிய கட்சியான பாஜக, இவ்வளவு தரம் தாழ்ந்து அரசியல் செய்ய வேண்டுமா..நான் அதிமுக கூட்டணியில் தான் இருக்கின்றேன்.. பாஜக கூட்டணியில் இல்லை. இன்னொரு விஷயம், பாஜக கட்சியில் ஹெச்.ராஜான்னு ஒரு மனுசன் இருக்கிறார்.. அவரை தெரியுமா..? அவர் என்னைக்குமே நல்லது பேசியது கிடையாது.. அதனால அவருடைய பேச்சை மக்கள் யாருமே பெரிசா எடுத்துக்க மாட்டாங்க" என்றார் கருணாஸ்.