மானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு!
சிவகங்கையில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
சிவகங்கை: தெருவில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த 2 தலித் இளைஞர்களை, மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி தப்பி ஓடிவிட்டது... இதனால் மானாமதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு வயது 25. இவருடைய நண்பர் பெயரும் சதீஷ். அவருக்கும் வயது 25!
இவர்கள் இருவரும் கிருஷ்ணராஜபுரம் தெருவில் உள்ள சாலையின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் பார்த்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் 4 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று வந்தது.
இரண்டு சதீஷையும் அரிவாளால் விரட்ட தொடங்கினர். இதனால் இருவருமே பதறி அடித்து தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால், அந்த கும்பல் இவர்களை விரட்டி வெட்டி தப்பி ஓடிவிட்டது. வெட்டுப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் ரோட்டிலேயே சரிந்து விழுந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை தந்து, பிறகு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ரோஹித் நாதன் நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பார்வையிட்டார். இதையடுத்து அவரது தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கபட்டுள்ளனர். தப்பி சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு மானாமதுரையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.