சிவகங்கையும் ராகுல் காந்தியின் பரிசீலனையில் இருந்தது.. ப.சிதம்பரம் பரபர தகவல்
ராகுல்காந்தி சிவகங்கையில் போட்டியிடுவதாக இருந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை: அமேதியைத் தாண்டி ராகுல் காந்தி போட்டியிடும் 2வது தொகுதிக்கான பரிசீலனைப் பட்டியலில் வயநாடு தவிர சிவகங்கை மற்றும் கர்நாடகத்தில் ஒரு தொகுதியும் இடம் பெற்றிருந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரசின் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும், சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் யார் என்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அதன் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். முன்னதாக இங்கு யாருக்கு சீட் தருவது என்பதில் பெரும் குழப்பமும், பிரச்சினைகளும் நிலவின.
வேட்பாளர் யார்?
ப.சிதம்பத்தின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் வரிசையாய் நிற்க, சீட் தருவதில் பல உட்கட்சி தகராறுகள் எழுந்தன. கடைசியில் மகனுக்கு சீட் வாங்க டெல்லிக்கே சென்று தலைமையிடம் பேசி, இறுதியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் என்று அறிவிக்கப்பட்டது.
தி இந்து நாளிதழ்
இப்போது மகனுக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் ப.சிதம்பரம். இந்நிலையில் மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழ் பதிப்பை ப.சிதம்பரம் வெளியிட்டார். இந்தப் பின்னணியில், 'தி இந்து' நாளிதழுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் சிவகங்கை தொகுதி குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார் ப.சிதம்பரம்.
முதல் வேட்பாளர் பட்டியல்
சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பதில் என்ன சர்ச்சை என்ற கேள்வி முன்னிறுத்தி கேட்கப்பட்டது. அதற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கும்போது, ''சர்ச்சையெல்லாம் எதுவும் கிடையாது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான 24 மணி நேரத்திலேயே சிவகங்கை தொகுதியின் வேட்பாளர் பெயர் முடிவாகி விட்டது. ஆனால் அதை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது.
சிவகங்கை தொகுதி
இதற்கு காரணம், அமேதி தவிர இன்னொரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. அந்த 2வது தொகுதிக்கான பரிசீலனைப் பட்டியலில் வயநாடு, சிவகங்கை மற்றும் கர்நாடகாவில் ஒரு தொகுதி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தது. அதனால்தான் இந்த தாமதமே தவிர சர்ச்சை எல்லாம் ஒன்னும் இல்லை" என்றார்.