அது தவறு.. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.. குடியுரிமை சட்டம் குறித்து ப சிதம்பரம்!
சிவகங்கை: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை முரட்டு பெரும்பான்மையை வைத்து பாஜக அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ப சிதம்பரம், சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று மாலை திரும்பினார். இன்று திருமயம் தொகுதி எம்எல்ஏவு ரகுபதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசினார். அத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப சிதம்பரம், குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று குற்றம்சாட்டினார்.
இவ்வளவு பெரிய வெற்றி.. இதுதான் இப்போ பிரச்சினை.. எடியூரப்பாவுக்கு காத்திருக்கு அக்னி பரிட்சை
ப சிதம்பரம் யோசனை
மத்திய பாஜக அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும் என யோசனை தெரிவித்தார். எல்லா நாடுகளிலும் அகதிகள் சட்டம் இருப்பதாகவும் அகதிகளாக யார் விண்ணப்பிக்கலாம்? அதில் யார் தகுதியானவர்கள்? யாரை அகதியாக ஒரு நாடு ஏற்றுக்கொள்ளும்? எவ்வித நிபந்தனைகளோடு ஒரு நாடு அகதிகளை ஏற்றுக் கொள்ளலாம்? எனப் பல விதிகள் பல மரபுகள் உள்ளதாகவும் தனது பேட்டியில் ப சிதம்பரம் குறிப்பிட்டார்.
பாகுபாடு சட்டம்
அகதிகள் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து பார்க்காமல் அதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை சட்டம் என்ற தவறான சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
அசாம் நிராகரிப்பு
அசாம் தேசிய மக்கள் பதிவேடு குறித்து பேசிய ப சிதம்பரம்,1600 கோடி ரூபாய் செலவில் அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கிறேன் என செலவு செய்த நிலையில் அதனை அசாம் அரசு நிராகரித்துவிட்டதால் அந்த ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வீணாய் போனது என விமர்சித்தார். முன்னதாக நாங்கள் எவ்வளவோ சொல்லியும் மத்திய அரசு கேட்கவே இல்லை என்றும் ப சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
மோசமாக இருக்கும்
தற்போது முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் ப சிதம்பரம் எச்சரித்தார். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து ஆராய்ந்து ஒரு முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வருவது விவேகமான செயலாக இருக்க முடியும் என்று சிதம்பரம் கூறினார்.