எச்.ராஜா வீட்டருகே பெரியார் சிலை.. அகற்றிய காரைக்குடி போலீஸ்! “பாஜக ஆட்சியா?” என கொந்தளிக்கும் திவிக
காரைக்குடியில் எச்.ராஜா வீட்டிற்கு அருகே புதிய வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை அகற்றப்பட்டு உள்ளது
சிவகங்கை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வீட்டிற்கு அருகே திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர் கட்டிய புதிய வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்டித்து அந்த இடத்திலேயே பெரியாரியவாதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்டு வருகிறார்.
இவர் காரைக்குடியை அடுத்த கோட்டையூர் உதயம் நகரில் புதிதாக சொந்த வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையும் வைக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் களம் இறக்கப்படுவாரா? - எச்.ராஜா சொன்ன பதில்!
எச்.ராஜா வீட்டுக்கு அருகே
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இவரது இந்த வீடு அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் பெரியார் சிலையின் திறப்பு விழா இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இந்த சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை, வருவாய் துறை எதிர்ப்பு
இந்த நிலையில் இந்த சிலையை திறக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இளங்கோவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதனை அகற்ற சொன்னதற்கு இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அகற்றப்பட்ட பெரியார் சிலை
ஆனால், எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள், பெரியார் சிலை மீது துணியை சுற்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக பெரியாரியவாதிகள் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த அரசெழிலன் தெரிவித்தபோது, அரசு அனுமதிபெற்ற பட்டா நிலத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கிய 2 நீதிமன்ற தீர்ப்புகளை காட்டிய பிறகும் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதை அகற்றினர் என்று தெரிவித்து உள்ளார்.
இளங்கோவன் பேட்டி
இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான இளங்கோவன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது, "தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையை என்னுடைய சொந்த பட்டா இடத்தில் மதில் சுவறுக்கு உள்ளே நான் வைத்தேன். காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்த யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக சிலையை அகற்றி உள்ளார்கள்.
நீதிமன்ற தீர்ப்பு
காரைக்குடியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவுதான் இருக்கும். நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக இருப்பதாக நாங்கள் காவல்துறையிடம் கூறினோம். சிலையை அகற்றக்கூடாது, அப்படி அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். மீறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தோம்.
காவல்துறையில் காவிகள்
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நான் படித்துக் காட்டியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று சொன்னபோது போங்க என்று கூறினார். இந்த சிலையை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்கிறார்கள். யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம்போய் பேச சொன்னோம். காவல்துறையில் காவிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
திமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?
இது வெறும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பெரியார் மீதான காழ்புணர்ச்சியால் அதிகாரிகள் இப்படி நடக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பெரியாருக்கு சிலை வைப்பதில் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை. ஏதோ பாஜக ஆட்சி நடப்பதைபோல் தெரிகிறது.