காரைக்குடி பள்ளியில் தமிழர் திருவிழா.. பாரம்பரிய முறையில் கொண்டாடிய மாணவர்கள், ஆசிரியர்கள்
ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கும் வகையில் சாதி, இன, மதம் கடந்து தமிழகத்தில் அனைவரும் கொண்டாடுவது பொங்கல் பண்டிகை மட்டுமே. மஞ்சள் தோரணங்கள், புத்தரிசியில் பொங்கல், கரும்பு என கொண்டாடப்படும் தைப்பொங்கல், தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் உன்னத திருவிழா.
பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவை கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவார்கள். தவிர, அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.
நினைவுப்படுத்தும் கொண்டாட்டம்
கிராமப்பகுதிகளில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து வரும் நிலையில் பொங்கல் விழா ஒரு விடுமுறை கொண்டாட்டமாக பொங்கல் பண்டிகை மாறிவிட்டதாக ஒரு கருத்தும் உண்டு. ஆனால்... இன்றும் கிராமங்களிலும், அதனை சார்ந்த பகுதிகளிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் மறைந்துவிட வில்லை என்பதையே சில கொண்டாட்டங்கள் நமக்கு நினைவுப்படுத்துகின்றன.
பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் கொண்டாட்டங்களை சொல்லவே வேண்டும். அப்படியொரு நிகழ்ச்சி தான்.. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்றது. அங்குள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கல்வி அதிகாரிகள் பங்கேற்பு
விழாவிற்கு தேவகோட்டைமாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்யமூர்த்தி தலைமையேற்றார். ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி பியர்ல் சங்கமம் தலைவர் பேராசிரியர் நாவுக்கரசு முன்னிலை வகித்தார்.அமெரிக்கா விவசாயத்துறை மென்பொருள் நிர்வாகி அன்னராஜ் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்.
பரிவட்டம் கட்டி மரியாதை
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி ரோட்டரி சங்க துணை ஆளுநர் முத்துக்குமார், பட்டயத்தலைவர் நாச்சியப்பன், கும்பகோணம் டிகிரி காபி உரிமையாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.பொங்கல்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டியும், கும்ப மரியாதை செய்தும் வரவேற்பளிக்கப்பட்டது.
பாரம்பரிய கலைகள்
அதன் பின்னர் நமது பாரம்பரிய கலைகளுடன் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், புலியாட்டம், காவடியாட்டம் போன்ற ஆட்டங்கள் மூலமும், தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு போதனை
தேவகோட்டைமாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்யமூர்த்தி பேசுகையில், மாணவர்கள் மதச் சார்பின்றி ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் எனவும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்க்கவேண்டும் என்றும் கூறினார்.
வென்றவர்களுக்கு பரிசுகள்
இப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கோலப்போட்டி, பலூன் உடைத்தல், நீர் நிரப்புதல், உரி அடித்தல், கண் கட்டி யானைக்கு வால் வரைதல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் கயிறு இழுத்தும், கும்மி அடித்தும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
பாரம்பரிய ஆடைகளில் மாணவர்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் பாரம்பரிய உடையில் வந்தது, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும்விதத்தில் அமைந்தது.பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். முடிவில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளிஇன்ட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் நெகேமியஸ் ராயன் நன்றி கூறினார்.பட்டதாரி ஆசிரியர்கள்உஷா, உமா மற்றும் வளர்மதி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.