நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை: திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற கிராமத்தில் சீமானின் பெற்றோர்கள் செந்தமிழன், அன்னம்மாள் வசித்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சீமானின் தந்தை செந்தமிழன் இன்று அரணையூரில் காலமானார். அவரது மறைவினை நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சீமானின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் கிராமத்தில் மறைந்த செந்தமிழன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் செந்தமிழன். அவரது மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.