காதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா
நீட் குறித்து பிரிவினைவாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்துகிறது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடி: தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்திய காரணத்தால்தான் சில மாணவர்கள் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு வழக்கு நளினி சிதம்பரத்தின் வாதத்தால் தான் முடிந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டியது சிதம்பரம் வீட்டு வாசலில் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுதும் முன்பாகவே தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டனர். இந்த சூழ்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பல அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்திய காரணத்தால் சில மாணவர்கள் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு.. தற்கொலை செய்து கொண்ட ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.. தருமபுரியில் போராட்டம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு தோறும் பிளஸ் 2 தேர்வில் தோல்வி பயத்தினாலும், மார்க் குறைவாக வரும் என்றும் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
காதல் தோல்வியால் பலரும் தற்கொலை செய்கின்றனர். அதற்காக காதலிப்பது தவறு என்று சட்டம் இயற்றினார்களா என்று கேட்ட எச். ராஜா, தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பிரச்னை செய்து வருகின்றன என்று கூறியுள்ளார்.