கடும் வறட்சி ஒரு பக்கம். அரசின் அலட்சியம் மறுபக்கம்.! வாழ முடியாமல் ஊரை காலி செய்யும் மக்கள்
சிவகங்கை: சிவகங்கை அருகே கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றே காலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே உச்சப்புளி கிராமத்தில் தான் இந்த சோக நிலை ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த கிராமத்தில், தற்போது 20 குடும்பங்களே வசித்து வருகின்றன.
ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த உச்சப்புளி கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லை. பலமுறை முறையிட்டும் தண்ணீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்து தராததால், உச்சப்புளி கிராமத்தில் 7 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஊரை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
கடும் வறட்சியால் தவிக்கும் தங்களுக்கு அரசு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தர முன்வரவில்லை. அதன் காரணமாகவே மக்கள் ஊரை காலி செய்து கொண்டு வேறு இடம் போக காரணம் என உச்சப்புளி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்கள் ஊருக்கென தண்ணீர் தொட்டி உள்ளதாகவும், அதில் வரும் தண்ணீரில் பயங்கர உப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். குறைந்த அளவிலேயே வரும் அந்த தண்ணீரையும் குடிப்பதற்கு பயன்படுத்தவே முடியாது. அந்த அளவிற்கு அதன் தரம் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
குடிப்பதற்கு, குளிப்பதற்கு என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
நேரில் வந்து ஒருமுறை கூட எங்களது குறைகள் என்னவென்பதை பார்க்கவோ, கேட்கவோ அதிகாரிகள் யாரும் தயாராக இல்லை. அதே போல மின் கம்பிகள் பல இடங்களில் அறுந்து தொங்குவதாகவும், அதில் சிக்கி 4 ஆடுகள் வரை உயிரிழந்துள்ளன மின் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதி நாட்கள் மின்சாரம் இன்றியும் தவிக்கும் நிலை உள்ளதாக குறிப்பிட்டனர்.
அரசு அதிகாரிகள் தொடர்ந்து அமைதியாக தான் உள்ளனர். தங்களது குறைகளை தீர்க்க யாரும் முன்வரவில்லை என குறிப்பிட்டனர். அடிப்படை தேவைகளான தண்ணீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி என எதுவுமே சரிவர இல்லாத ஒரு இடத்தில், எவ்வளவு நாட்கள் இருக்க முடியும் என வினவியுள்ளனர்.
பல வருடங்களாக தூர்வாராமல் உள்ள ஊரணியையாவது தூர்வாரி கொடுங்கள் என அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதற்கும் அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் வரவில்லை என கூறினர். பல ஆண்டுகளாக முயற்சித்து நடவடிக்கை எதுவும் அரசு எடுக்காததால் ஒரு கட்டத்தில் சோர்வுற்று நின்று விட்டதாக மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.