கொரோனா இல்லாத மாவட்டத்தை நோக்கி வீறுநடைபோடும் சிவகங்கை.. சாதித்தது எப்படி?
சிவகங்கை: கொரோனா இல்லாத மாவட்டம் என்ற பெயரை பெற மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சிவகங்கை மாவட்டம் வீறு நடைபோடுகிறது.
கொரோனா வைரஸ் உலகத்துக்கே ஆட்டம் காட்டி வருகிறது. தம்மாதூண்டு வைரஸ் இன்று அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி பெருத்து வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வைரஸுக்கு பெரும்பாலான நாடுகள் தப்பவில்லை. சரி தமிழக நிலவரத்துக்கு வருவோம். இங்கு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வந்துவிட்டது. கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வந்து போய்விட்டது. தற்போது இந்த 2 மாவட்டங்களும் பச்சை நிற மண்டலங்களாக உள்ளன.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மாநகராட்சிக்குட்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா உயர்ந்தபோதிலும் இங்கு மட்டும் உயரவே இல்லை. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இன்னும் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் சிவகங்கை சாதித்தது எப்படி என்பது குறித்து அனைவரின் கவனமும் சிவகங்கையின் பக்கம் திரும்பியது. இதுகுறித்து விளக்கமளிக்க சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீனா உள்பட வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.
அது போல் கடந்த மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 5,011 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 28 நாட்கள் கழித்து அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்தோம். எனினும் 28 நாட்கள் ஆன பிறகும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா லாக்டவுன்.. உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்பு.. ஐ.நா. அமைப்பு
இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது. அது போல் டெல்லி மாநாட்டுக்கு சென்ற 41 பேரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தவுடன் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் வசித்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டன.
Recommended Video
அவர்கள் ஒவ்வொருவராக குணமடைந்தாலும் 28 நாட்களுக்கு அவர்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்படி செய்யப்பட்டது என்றார்.