நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி
சிவகங்கை: நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வெற்றி பெற்றன.
இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர். பெரும்பான்மை இல்லாதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு
இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இருவாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.. இதற்கிடையே கடந்த 4 ந் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மீண்டும் ஒத்திவைப்பு
ஆனால் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 4 ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை வந்தார். இதன் காரணமாக மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் 4 வது முறையாக ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்படட்து.
திமுக சார்பில் செந்தில்
இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. ந
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1 வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரனும், தி.மு.க. சார்பில் 7 வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிட்டனர்.
பொன்மணி பாஸ்கர் வெற்றி
குலுக்கல் முறையில் நடந்த தேர்தலில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பதவிக்கு இன்று மாலை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.