3 சிட்டுக்குருவியை காக்க.. ஒரு கிராமமே சேர்ந்து எடுத்த முடிவு.. சிவகங்கையில் நடந்த விசித்திர சம்பவம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சிட்டுக்குருவிகளை காக்க ஒரு கிராமமே சேர்ந்து எடுத்த விசித்திர முடிவு ஒன்று பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் சிட்டுக்குருவிகளை காக்க அவ்வப்போது வெடிவெடிக்க மாட்டோம் என்று முடிவு எடுப்பது வழக்கம். இன்னும் சில மாவட்டங்களில் பல வருடங்கமாக தீபாவளியே கொண்டாடாமல் இருப்பதும் கூட வழக்கம்.
ஆனால் சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம் மிகவும் விசித்திரமான முடிவை எடுத்துள்ளது. உயிரினங்கள் மீதான தமிழர்கள் பாசத்தை உணர்த்தும் வகையில் இந்த கிராம மக்கள் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
சிவகங்கையில் என்ன நடந்தது
பொத்தகுடி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு 6க்கும் அதிகமான தெருக்கள் உள்ளது. எல்லா ஊர்களையும் போல இந்த தெருக்களில் இருக்கும் தெருவிளக்கிற்கு, ஊரின் இறுதியில் ஒரு மெயின் பாக்ஸ் உள்ளது. இங்கு கடந்த மாதம் குருவி ஒன்று கூடு கட்டி உள்ளது. அதில் இரண்டு முட்டைகளையும் போட்டுள்ளது.
குட்டி குருவி
அதேபோல் இந்த பெட்டியில் இரண்டு குட்டிகளை அந்த குருவி பொறித்து இருக்கிறது. அந்த தெரு விளக்கை போட வேண்டும் என்றால் அந்த குருவி கூட்டை கலைக்க வேண்டும். மொத்தமாக தெரு விளக்கு போட இருக்கும் மெயின் பாக்சில் அந்த கூட்டை அந்த குருவி கட்டி உள்ளது. இதனால் மெயின் பாக்சில் இருக்கும் சுவிட்சை போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
செம முடிவு
அந்த கிராமம் மொத்தத்திற்கும் தெரு விளக்கு போட வேண்டும் என்றால் மொத்தமாக அந்த குருவி கூட்டை கலைக்க வேண்டும். ஆனால் தெரு விளக்கு வேண்டுமா அல்லது குருவி கூடு வேண்டுமா என்றதில் மக்கள் குருவி கூட்டை பாதுகாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அங்கு தெரு விளக்கை போடாமல் குருவி கூட்டை மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பாதுகாத்து இருக்கிறார்கள்.
எத்தனை நாட்கள்
ஒருநாள் இரண்டு நாட்கள் இல்லை கடந்த 30 நாட்கள் அங்கு மின்சாரம் இல்லை. தெரு விளக்கை போடாமல் 30 நாட்களாக மக்கள் இருக்கிறார்கள். குருவிகளை காக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த கிராம மக்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எல்லோரும் ஒரு மனதாக இதை ஏற்றுக்கொண்டு உள்ளனர். அவர்களின் இந்த பறந்த குணம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.