ஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்!
சிவகங்கை: ஆன்லைனில் நடத்தும் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி சுபிக்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசை முதல்வர் எடப்பாடியிடம் பெற்றவர் மாணவி சுபிக்ஷா.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. நீட் தேர்வுக்கு முன்பாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு மரணங்களைப் போல ஆன்லைன் பாடங்களாலும் தற்கொலைகள் தொடருகின்றன. ஆன்லைன் பாடங்கள் புரியாத காரணத்தால் சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு இறந்திருக்கிறார்.
நீட் அச்சத்தால் 15 மாணவர்கள் மரணம்.. தமிழக அரசே முழுக்காரணம்.. முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு!
சிவகங்கை சுபிக்ஷா
சிவகங்கையை அடுத்த திருப்புவனம் செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள் சுபிக்ஷா. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் அவரது பள்ளியில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தி உள்ளனர்.
மதிப்பெண்கள் குறித்து கவலை
ஆனால் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களை சுபிக்ஷாவால் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதில் கடுமையான மன உளைச்சலுக்குள்ளானார் சுபிக்ஷா. இப்படியே நீடித்தால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிடும் எனவும் சுபிக்ஷா கவலைப்பட்டிருக்கிறார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்த நிலையில்தான் திங்கள்கிழமை இரவு மாணவி சுபிக்ஷா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர் சுபிக்ஷா. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசும் பெற்றிருந்தார் சுபிக்ஷா.
ஆன்லைன் பாடம்- கைவிடுக
சுபிக்ஷா போன்ற மாணவர்களால் ஆன்லைன் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. இது மாணவர்களைத் தற்கொலைக்கு தூண்டுகிறது. இதனால் இந்த ஆன்லைன் கல்வி முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.