வாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஒட்டப்பட்டிருந்த மாதிரி படிவத்தில் திமுகவின் சின்னம் இல்லாததால் அக்கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில், மாவட்ட உறுப்பினராக திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஸ்டெல்லா என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வாக்குசாவடி மையத்தில் ஒட்டப்பட்டிருந்தது வேட்பாளர்களின் மாதிரி படிவத்தில் வேட்பாளர் ஸ்டெல்லாவின் பெயருக்கு நேராக உதயசூரியன் சின்னம் விடுபட்டிருந்தது. இதனை கண்டு கோபமடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாதிரி படிவத்தில் உதயசூரியன் சின்னம் விடுபட்டதற்கு அதிமுகவே காரணம் என குற்றம்ச்சாட்டிய அவர்கள், தோல்வி பயத்தால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொண்டு இதுபோன்ற முறைகேட்டில் அதிமுகவினர் ஈடுபட்டு வருவதாக குற்றம்ச்சாட்டினர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி அரவேணு ஊராட்சிக்குட்பட்ட 12 வது வார்டுகளில் படுகர் இன மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கோத்தகிரியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் குஞ்ச பண்ணை பகுதியில் கோத்தர், இருளர், குறுபர் என பழங்குயின மக்களும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதி