மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்
சிவகங்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டு வந்த திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
பொன்னாங்குளம் ஊராட்சியில் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடையும், காஞ்சிராங்கால் ஊராட்சி டி.புதூர் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை கட்டிடம் மேலப்பூங்குடி ஊராட்சி, வில்லிப்பட்டி கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்டவற்றை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
பின்னர் பல திட்டங்களை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் பாஸ்கரன் வறுமையிலுள்ள குடும்பத்தினர் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தோடு மறைந்த ஜெயலலிதா பல திட்டங்களை செயல்படுத்தினார்.
அவர் மறைந்தாலும் தமிழகத்தில் அவரின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடைக்கோடி கிராமப் பகுதிகளிலும் அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மீது துறைரீதியாக உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அரசின் திட்டங்கள் முழுமையாக பெற்றுத் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதே அதிமுக அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் பாஸ்கரன் குறிப்பிட்டார்.