தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி (நாளை) தேவர் ஜெயந்தி குருபூஜை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் தேவர் ஜெயந்தி குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இதேபோல் தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகள் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.