வினிதா திடீர் பல்டி.. "ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க"
டிக் டாக் வினிதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
சிவகங்கை: வினிதா சொன்னது எல்லாமே பச்சை பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டது. "ஆமா.. அபியுடன்தான் நான் ஓடிப்போனேன்.. அபிகிட்டதான் என் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க" என்று டிக்டாக் வினிதா வாக்குமூலத்தில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பல திடுக் தகவல்கள் இவரது விசாரணையில் தினந்தோறும் கிளம்பி கொண்டே இருப்பது குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் தந்து வருகிறது!
தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர்தான் வினிதா. 20 வயது பெண்ணான இவர் நர்சிங் முடித்துள்ளார். ஆரோக்கிய லியோ என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
ஆரோக்கிய லியோ கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரது மனைவி வினிதா மட்டும் ஊரில் இருந்தார். பொழுதை கழிக்க டிக் டாக் ஆப்பினுள் நுழைந்த வினிதாவுக்கு, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நட்பு ஆரம்பமானது. கையில் அபி பெயரை பச்சை குத்தி கொள்ளும் அளவுக்கு வினிதாவுக்கு அபி மேல் கொள்ளை பிரியம்.
மாயம்
இந்நிலையில் வெளிநாட்டுக்கு போன கணவன் திரும்பி வந்ததும், மனைவியின் நடவடிக்கையை கண்டு அதிர்ந்து, மாமியார் வீட்டில் கொண்டு விட்டுள்ளார். பிறகு மாமியாரும், மருமகனும் சேர்ந்து வினிதாவை கண்டிக்கவும், 50 சவரன் நகையுடன் வினிதா மாயமானார். தன் மகள் அபியுடன் ஓடிப்போய்விட்டதாக வினிதா அம்மா போலீசில் புகார் தரவும், அன்று மாலையே ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார் வினிதா.
விளக்கம்
"நான் யார்கூடயும் ஓடிப்போகவில்லை, வெறும் 20 சவரன் என் அக்கா நகையை எடுத்துட்டு போனேன். என் புருஷன் அடிச்சு கொடுமைப்படுத்தவேதான் வீட்டை விட்டு போனேன். அபியுடன் போகவில்லை" என்று விளக்கம் அளித்தார். இதையேதான் வீடியோ வெளியிட்டு அதிலயும் கூறியிருந்தார்.
விசாரணை
ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் வினிதா சொன்னது அவ்வளவும் பொய் என தெரியவந்துள்ளது. இதை பற்றி போலீசாரிடம் சொன்னதாவது: "அபின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளை போல எனக்கும் திருவிழாவில் டான்ஸ் ஆடணும்னு ஆசை. ஆனா என் வீட்டுல விடல. என் கணவர் திடீர்னு வந்து நிக்கவும் எனக்கு எதுவுமே புரியலை.
தஞ்சம்
எங்க அம்மா வீட்ல கூட்டிட்டு போய் விட்டுட்டார். என் அம்மா இனி டிக் டாக் பண்ணகூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதனாலதான் வீட்டை விட்டு ஓடிப் போனேன். அபிகிட்டதான் போனேன். 20 பவுன் நகையை அபிகிட்டதான் தந்தேன். ஆனால் வீட்டில் புகார் தந்து போலீசில் என்னை தேடுகிறார்கள் என்று தெரிந்ததுமே சிவகங்கை போலீசில் ஆஜராக வந்தேன். அப்போ என்கூட, தோழிகள் அபி, சரண்யா ரெண்டு பேருமே வந்தார்கள். ஆனால் உள்ளே வராமல் ஸ்டேஷன் வாசலிலேயே என்னைவிட்டு சென்றுவிட்டனர்.
கிஃப்ட்கள்
அதனால் நான் மட்டும்தான் ஆஜராகி விளக்கம் தந்தேன். அபிகிட்ட 20 சவரன் நகை கொடுத்தது உண்மைதான். அபிதான் நகையை தரும்படி கேட்டாள். அதற்கு முன்பு அவளும் என் பிறந்த நாளுக்கு ஒன்றரை பவுனில் மோதிரம் கிஃப்ட் தந்திருக்கிறாள். இப்படி நிறைய கிஃப்ட் எங்களுக்குள்ள கொடுத்துப்போம், வாங்கிப்போம். டிக்டாக் ஆசையால் இப்படியெல்லாம் செய்துட்டேன். மன்னிச்சுடுங்க. இனி நான் வேலைக்கு போறேன்" என்றார்.
அபி
உடனே தேவகோட்டை போலீசார் அபியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறர்கள். அப்போது வினிதா தந்த நகை பற்றி அபி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இப்படி போனில் பேசினால் உண்மைதன்மை வெளியே வராது என்று நினைத்த போலீசார், அபியிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவகோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். தங்களுடன் வினிதாவின் அம்மா, கணவர் ஆரோக்கிய லியோ ஆகியோரையும் போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
மாறி மாறி பேச்சு
முதலில் வீட்டை விட்டு ஓடியதற்கு கணவன்தான் காரணம் என்றார் வினிதா.. அது பொய்யாகிவிட்டது.. தன் அம்மா டிக்டாக் செய்யக்கூடாது என்று திட்டியதால்தான் வெளியேறினாராம்.. தான் பணம் எடுத்துக்கொண்டு அபியுடன் ஓடவில்லை என்றார் வினிதா.. அது பொய்யாகிவிட்டது. நேராக அபியிடம்தான் சென்று 20 சவரன் நகையை தந்துள்ளார். ஆக மொத்தம், வினிதா இதுவரை சொன்னது எல்லாமே பொய் என்று ஆகிவிட்டது.
ஆலோசனை
இப்போது அபியிடம் நடத்தப்போகும் கிடுக்கிப்பிடியில்தான் எல்லா வண்டவாளமும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வினிதா விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே தேவக்கோட்டை போலீசார் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்போது வினிதாவுக்கு சிறப்பு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.