நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 75% கேள்விகள்... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!
சிவகங்கை: நீட் தேர்வில் 75% கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வருகிற ஆண்டில் மாணவ, மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
சிவகங்கை அருகே கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்ட அளவில் உள்ள நீட் பயிற்சி மையத்தை, கல்வி மாவட்ட அளவில் அமைக்க முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படிதான் வினாத்தாள் அமைக்கப்படும். அதிலிருந்துதான் கேள்விகளும் எழுப்பப்படும். உடற்கல்வி ஆசிரியர் பணி நிரப்பப்பட்டு வருகிறது. முழுமையடைந்த பின் மாணவர்களுக்கு இலவசமாக உடற்கல்வி பாடநூல் வழங்கப்படும்.
திருக்குறள் பாட நூல் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.வருகிற ஆண்டில் மாணவ, மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் கேட்கப்படும் 75% கேள்விகள் தமிழ்நாட்டு பாடதிட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தமிழக அரசுக்கு பெருமை.
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணிகளை தொடர்ந்து நிரப்பி வருகிறோம்.7 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் அவர்களுக்கும் பணி வழங்கி வருகிறோம். வெயிட்டேஜில் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அட்டவணை வெளியிடப்பட்டு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தேவைக்கேற்ப பணிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.