பாரி வள்ளலின் பறம்பு மலையை சிதைக்கும் கல்குவாரிகள்- போராட்டம் நடத்திய 65 பேர் கைது
சிவகங்கை: சங்க கால மன்னர் பாரி வள்ளல் ஆண்ட பறம்பு மலையை சிதைக்கும் கல்குவாரிகளை தடை செய்ய கோரி போராட்டம் நடத்திய 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பறம்பு மலை. இந்த பறம்புமலைதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் ஆண்ட நிலம். சங்ககாலப் புலவர்கள் பல பாடல்களில் பறம்பு மலை பற்றி பாடியுள்ளனர்.
இந்த பறம்புமலையில் தனியாருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பறம்பு மலையே அழிந்து போகும் அபாயம் உள்ளது. இதற்கு எதிராக கிராம மக்கள் இன்று போராட்டம் நடத்தினர். முன்னதாக கடந்த ஒரு மாத காலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மக்கள் ஒன்று சேர்ந்து இன்று காலையில் கல்குவாரியை தடுத்திட வேண்டும், பறம்பு மலையின் பெருமைகள் காப்பாற்றப்பட வேண்டும், தனியார் வசம் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று எச்சரித்தனர். ஆனால் மக்கள் போராட்டம் தொடரவே போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். இதில் கிராம மக்கள் 65 பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்தனர்.
இனியும் திராவிடம் பேசி ஏமாற்ற முடியாது.. ஸ்டாலின் குறித்து பாஜக தலைவர் முருகன் கடும் தாக்கு
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், பாரி வள்ளல் ஆண்ட பறம்பு மலையை அரசு அதிகாரிகள், தமிழ் பண்பாட்டு வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், குன்றக்குடி தேவஸ்தானம் ஆகியவை உடனடியாக களத்தில் இறங்கி காப்பாற்ற வேண்டும். மேலும் பொதுநலன் வழக்கு மூலம் வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.