ஈரோட்டில் களமிறங்கும் டிடிவி தினகரன்? இரட்டை இலையும் நிச்சயம் முடங்குமாம்.. அவரே சொன்னதை கேளுங்க
சிவகங்கை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் தேர்வில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இருக்கும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் தானே தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னமே முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.
அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் களம் காண்கிறார். அதிமுக தரப்பில் இருந்து யார் போட்டியிடுவார் என்பதில் இன்னும் தெளிவான முடிவு எதுவும் கிடைக்கவில்லை.
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிய அமமுக.. குக்கருடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
இது தவிர அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. அமமுக இந்தத் தேர்தலில் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ள போதிலும் இன்னம் அங்கு வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை. இருப்பினும், அதற்கு முன்பே அமமுகவினர் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச் செயலாளருமான சண்முகவேல் தலைமையில் ஈரோடு சூரம்பட்டி அருகே அமமுக கட்சியினர் கையில் குக்கர் சின்னத்துடன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் இறங்கினர்.
டிடிவி தினகரன் போட்டி?
இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக வேட்பாளர் குறித்தும்.. இரட்டை இலை சின்னம் குறித்தும் டிடிவி தினகரன் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிவகங்கையில் அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "அமமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும். நானே கூட ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக சார்பில் நிற்க வாய்ப்புள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்வம்
அமமுக தொடண்ரக்ள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் இல்லாததால் இங்கு அரசியல் களத்தில் இப்போது பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.. காலம் புதிய தலைவர்களை உருவாக்கும்.. அதன் பிறகு நிலைமை மாறும். இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெல்ல வேண்டும் என்று இல்லை. கடந்த காலங்களில் ஜெயலலிதா இடைத்தேர்தல்களில் வென்றுள்ளார்..
திமுக மீது மக்கள் கோபம்
பொதுவாக மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது இயற்கைதான். ஆனால், திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சி சரி இல்லை என்று தான் மக்கள் திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால், திமுகவினர் எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர். மக்களின் அதிருப்தி இந்தத் தேர்தலில் நிச்சயம் வெளிப்படும்..
அதிமுக
அதிமுக இப்போது பிளவு பட்டு இருக்கிறது. இருப்பினும், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் இந்த இயக்கத்தில் தான் உள்ளனர். அவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் எங்களுக்கே ஆதரவு தருவார்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆட்சி அதிகாரம், பண பலம் என அனைத்தையும் தாண்டி எடப்பாடிக்கு எதிராக மக்கள் எனக்கு வாக்களித்து வெல்ல வைத்தார்கள். அதேபோல ஈரோடு மக்களும் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆர்கே நகர் போலவே இங்கும் நிச்சயம் வெல்வோம்.
இரட்டை இலை முடங்கும்
அதிமுகவில் இப்போது குழப்பமான சூழல் உள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் என இருவரும் பதவி வெறியில் இருக்கிறார்கள். எடப்பாடி தலைமையில் கூட்டணி அமைய நிச்சயம் வாய்ப்பில்லை. ஜெயலலிதா இருந்த பதவியை அடைய இடைக்கால பொதுச் செயலாளராகத் தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார். இப்போது தேர்தல் ஆணையத்தின் கையில் தான் அனைத்தும் உள்ளது. ஓபிஎஸ் எடப்பாடி இ.பி.எஸ் பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை இருப்பாதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட கூட்டணி என்பது சாத்தியமில்லை.. அதிமுகவில் இப்போது இருக்கும் இரண்டு அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பதுபோல்" என்று அவர் தெரிவித்தார்.