ரஜினி மீது வழக்கு தொடர்ந்தால்.. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.. ஹெச்.ராஜா எச்சரிக்கை
சிவகங்ககை: பெரியார் குறித்து ரஜினி பேசிய விவகாரத்திற்காக வழக்கு தொடர்ந்தால் அது வழக்கு தொடுப்பவர்களுக்கே ஆபத்தாகத்தான் முடியும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.
துக்ளக் பொன் விழாவில் பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு பெரியார் சேலத்தில் நடத்திய பேரணியில் ராமர் சீதா படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும். நிர்வாணமாக படங்கள் இருந்ததாகவும் இதை தைரியமாக பிரசுரித்தது துக்ளக்தான் என்று பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.ரஜினி சொல்வது முற்றிலும் பொய்யான மற்றும் அவதூறான கருத்து என்று கூறி திராவிடர் விடுதலை கழகத்தினர் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இரு வழக்கு
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒருவரும், சென்னையைச் சேர்ந்த ஒருவரும் தாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
எச்சரிக்கை
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறுகையில், திராவிடர் கழகத்தின் இப்போதைய நிலைமை ஆப்பசைத்த குரங்குபோல் உள்ளதாக விமர்சித்தார். ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கிறது என்றும் வழக்குக்கு சென்றால் அவர்கள்தான் உள்ளே செல்வார்கள் என்றும் ஹெச் ராஜா எச்சரித்தார்.
வெட்கம் இல்லையா
இந்து கடவுளை இழிவுப்படுத்தி எதிர்வினை பெற்ற திராவிடர் கழக தலைவர் கி வீரமணி மன்னிப்பு கேட்கவில்லை என்று விமர்சித்த ஹெச் ராஜா, நாகரிகம், பண்பாடு குறித்து ரஜினிக்கு பாடம் எடுக்க வீரமணிக்கு வெட்கமாக இல்லையா? என்று கடும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
விளைவுகள் வரும்
அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு என்று கூறிய அவர், திகவுடனான தொடர்பை முறிக்கவில்லை என்றால் விரைவில் மிக பெரிய விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா எச்சரித்தார். இதனிடையே பாஜகவினர் பலரும் ரஜினியின் பெரியார் பேச்சுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். ரஜினிக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்களுக்கு பாஜகவினர் பலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.