சிவகங்கை அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கூலிப்படையினர் வாக்குமூலத்தில் பகீர் தகவல்
சிவகங்கை: சிவகங்கையில் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வேறு ஒருவரை கொல்ல ஏவிய கூலிப்படையினர் ஏவியவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அமமுகவின் ஒன்றிய செயலாளராக இருந்தார். பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் மே 26-ஆம் தேதி வழக்கம்போல் அவர் வைகை ஆற்றில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு மர்ம கும்பல் வந்தது. அவர்களை கண்டதும் சுதாரித்துக் கொண்ட சரவணன் தப்பி ஓட முயற்சித்தார். எனினும் அந்த கும்பல் அவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டியது. இதனால் சரவணன் அதே இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
போலீஸார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
3 பேர் கைது
கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக சரவணனுக்கு வந்த செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த போலீஸார், ஐயப்பன், பழனிகுமார், பாலாஜி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சரமாரி தாக்குதல்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரவணனின் தந்தை ஊமைதுரை, சகோதரர் ஆண்டிச்சாமி ஆகியோர் அரசியல் கட்சியில் முக்கிய பதவியில் இருந்து வந்து தெரியவந்தது. 2009-ஆம் ஆண்டு ஆவாரங்காட்டை சேர்ந்த வேல்முருகன் தரப்பினர் ஊமைதுரையை சரமாரியாக வெட்டினர். எனினும் ஊமைதுரை உயிர் பிழைத்து கொண்டார்.
பிழைத்தார் தந்தை
எனினும் தனது தந்தையை கொல்ல வந்தவர்களை கொன்று பழித்தீர்த்து கொள்ள சரவணன் திட்டம் தீட்டினார். அப்போது உறவினர் தங்கராஜ் தலைமையில் கூலிப்படையினரை ஏவியுள்ளார். இதையடுத்து இவர்கள் வேல்முருகனை தாக்கிய போது காலில் மட்டுமே காயமடைந்த வேல்முருகன் அவர்களிடம் இருந்து பிழைத்து கொண்டார்.
பணம்
பின்னர் தங்கராஜ் தரப்பினர் போலீஸில் சிக்கிக் கொண்ட நிலையில் இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த 10 ஆண்டுகளில் மானாமதுரையில் வாரசந்தை ஏலம் எடுப்பது, பேருந்து நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் எடுப்பது என பல்வேறு தொழில்களை செய்து ஏராளமாக பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
2 மாதம்
ஆனால் கூலிப்படையினரான தங்கராஜ் உள்ளிட்டோருக்கு வழக்கு செலவுக்கு கூட எந்த பணஉதவியையும் செய்யவில்லையாம். இந்த ஆத்திரத்தில் சரவணனை தீர்த்து கட்ட தங்கராஜ் திட்டமிட்டு அவரது நடமாட்டம் செய்து வருவதை கடந்த 2 மாதங்களாக நோட்டமிட்டனர்.
பரபரப்பு
அப்போது கல்குறிச்சி பாலத்தில் சரவணன் தனியாளாக இருந்து நடைப்பயிற்சி செய்வதை அறிந்து கடந்த 26-ஆம் தேதி அவரை கொன்றதாகஅந்த 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர். ஏவியவரையே கூலிப்படையினர் சொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.