முள்படுக்கை மேலதான் படுப்பார்.. குறி சொல்வார்.. சொல்றதெல்லாம் அப்படியே நடக்கும்.. பக்தர்கள் பூரிப்பு
Recommended Video
சிவகங்கை: "முள்படுக்கையிலதான் படுப்பார்.. அந்த அம்மா சொல்றது அப்படியே நடக்கும்" என்று சிலாகித்து சொல்கிறார்கள் பக்தர்கள்!
திருப்புவனம் அருகே லாடனேந்தல் அருகே உள்ளது முத்துமாரியம்மன் கோயில்.. இங்கு வருஷந்தோறும் மார்கழி மாதத்தில், நாகராணி என்ற பெண் சாமியார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வார். இவருக்கு 55 வயதுக்கு மேல் ஆகிறது.
இதற்காகவே பிரத்யேகமான காடுகளில் இருந்து உடை முள், இலந்தை முள், காட்டு கருவேல முள் உள்ளிட்ட ஏழு வகையான முட்கள் கொண்டு வரப்படுகிறது.. இதை வைத்து 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு மெத்தை போல இந்த முள்படுக்கை அமைப்பார்கள்.. இதற்காக பிரத்யேக பூஜையும் செய்யப்படுமாம். பிறகு, பூஜை செய்த நீரை இந்த படுக்கை மேல் தெளித்து விடுவார்கள்.
இந்த முள் படுக்கையில் ஏறுவதற்கு வசதியாக மர ஏணியும் அமைக்கப்படும்.. முள் படுக்கைக்கு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்படும்.. முள் படுக்கையை 3 முறை வலம் வந்து மர ஏணியில் ஏறி நாகராணி ஆடுவார்.. பிறகு திடீரென்று முள் படுக்கையில் சாஷ்டாங்காக மல்லாக்க படுத்துவிடுவாராம்.. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கூட, ஆடாமல் அசையாமல் நாகராணி தவத்தில் இருப்பாராம்.. இதற்கு பிறகுதான் ஒவ்வொருவராக அருள் வாக்கு கேட்டு செல்வார்கள்.
திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இவர் அருள்வாக்கு சொல்வாராம்.. 48 நாள் இறுதியாக தீபாராதனை காட்டப்படும்.. அப்படியென்றால், சாமி மலையேறிவிட்டதாக அர்த்தமாம்.. இதையடுத்து, நாகராணி கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்.
அதன்படியே இந்த வருடமும் முள்படுக்கையில் நாகராணி அமர்ந்து குறி சொன்னார்.. இந்த முறை 3 மணி நேரம் முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார். இதனை காண சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த சம்பவம் திருபுவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. என்றாலும், "இந்தம்மா சொல்றது எங்களுக்கு அப்படியே நடக்கிறது" என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள்.