"அணு குண்டு" விற்பனை சரிந்தது.. "லட்சுமி"யை சீந்துவார் இல்லை.. கவலையில் சிவகாசி!
விருதுநகர்: பட்டாசு விற்பனை சரிந்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் சோகத்துடன் கூறுகின்றனர். காரணம், சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி தீர்ப்பு.
தீபாவளியன்று பகலில் பட்டாசு வெடிக்கக் கூடாது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதிலும் அதிக புகை இல்லாத பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டும். சத்தம் அதிகம் வரும் பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இதன் காரணமாக மக்கள் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். பகலில் பட்டாசு போடாமல் எப்டி தீபாவளி என்று குழம்பிப் போயுள்ளனர். ஆனால் அவர்களை விட பெரிய கவலையில் உள்ளனராம் பட்டாசு உற்பத்தியாளர்கள்.
[சென்னையில் நடு ரோட்டில் ரூ.2000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி.. குவிந்த பொதுமக்கள்]
சரி்ந்தது விற்பனை
சிவகாசியில்தான் அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கும் போகிறது. ஆனால் இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலியாக விற்பனை சரிந்து போய் விட்டதாம்.
அணுகுண்டு விற்பனை சரிவு
குறிப்பாக அணுகுண்டு, லட்சுமி வெடி உள்ளிட்ட சில வகை பட்டாசுகள் விற்பனை வெகுவாக சரிந்து விட்டதாம். இதை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அக்கறை காட்டவில்லையாம். அதிக சத்தம் வரும் பட்டாசுகள் இவை என்பதால் இவற்றின் விற்பனை அடியோடு சரிந்து விட்டதாம்.
கை பிசையும் உற்பத்தியாளர்கள்
இந்த வகை பட்டாசுகளை அதிக அளவில் தயாரித்து வைத்துள்ள உற்பத்தியாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். எப்படி இந்த பிரச்சினையை சமாளிப்பது என்று அவர்கள் யோசனையில் உள்ளனர்.
மறு சீராய்வு மனு
இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு செய்ய பட்டாசு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்த தீபாவளி, சிவகாசிக்கு இதுவரை சந்தோஷத்தைத் தரவில்லை.. மக்களும் கூட எப்படி வெடிச்சுக் கொண்டாடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.