பிஎஸ்சி படித்தும் வறுமையால் பட்டாசு வேலைக்குப் போய் உயிரிழந்த கர்ப்பிணி கற்பகவல்லியின் சோக கதை
வறுமை காரணமாக பட்டாசு ஆலைக்கு போன 7 மாத கர்ப்பிணி பெண் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். 19 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்தில் பட்டதாரி கர்ப்பிணி பெண்ணும், கல்லூரி மாணவியும் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி: பட்டாசுகளின் மருந்துகளின் வாசனை சிவகாசி, சாத்தூர் பகுதி மக்களுக்கு பழகிப்போன ஒன்று. தீப்பெட்டி தொழிலும் பட்டாசு தொழிலும் பிரதான தொழிலாக உள்ள விருதுநகர் மாவட்டத்தில் வறுமையின் பிடியில் உள்ள தொழிலாளர்கள் உயிரை பயணம் வைத்து பட்டாசு தொழிலுக்கு செல்கின்றனர். பட்டம் படித்தும் குடும்ப வறுமையால் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு போன 7 மாத கர்ப்பிணி பெண்ணும், கல்லூரி மாணவியும் உடல் சிதறி பலியாகியிருக்கின்றனர்.
Recommended Video
உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் பெயர் கற்பகவல்லி. சாத்தூரைச் சேர்ந்த இவர் பிஎஸ்சி பட்டதாரி. அவருக்கு பட்டாசு வேலை தெரியாது என்றாலும் குடும்ப வறுமையினால் சில தினங்களுக்கு முன்புதான் பணிக்கு சென்றிருக்கிறார்.
அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தை அச்சத்துடனே விவரிக்கின்றனர் பொது மக்கள். பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில் அன்பின்நகரம், ஏழாயிரம் பண்ணை, படந்தால், மேட்டுப்பட்டி, மார்க்கநாதபுரம், அச்சன்குளம், சல்வார்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலை செய்துவந்தனர்.
நேற்று 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். பிற்பகவல் 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தம் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ஆலையில் இருந்த பல அறைகள் தரைமட்டமாகின. சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் தீயை முழுவதுமாக அணைக்க 4 மணி நேரம் பிடித்தது. தொடர்ந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறிய வண்ணமாக இருந்தது.
உயிருக்கு போராட்டம்
இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன. அந்த அறைகளில் பணியாற்றிய பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டும், உடல் கருகியும் பிணமாக கிடந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களும், ஆலையில் மற்ற அறைகளில் பணியாற்றியவர்களும் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர். உயிருக்கு போராடியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு, சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பறிபோன உயிர்கள்
இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்தில் பலியானவர்களின் உடல்கள் மிகவும் சிதைந்து போயும், கருகியும் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் அதிகம்
பட்டாசு ஆலை வேலைக்கு வந்தவர்கள் பற்றிய வருகை பதிவேடு எதுவும் ஆலை நிர்வாகத்தால் சரிவர பின்பற்றப்படவில்லை. இதனால் நேற்று பணிக்கு வந்தவர்களைப் பற்றிய விவரத்தை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிதறிப்போன உடல்கள்
வெடிவிபத்தினால் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கின. பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தவர்களை சடலமாகவும், படுகாயத்துடனும் மீட்டெடுத்து ஆம்புலன்சில் ஏற்றிய காட்சிகளை பார்த்து பெண்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியானவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்தும், கருகியும் போயுள்ளன.
13 பேர் யார் யார்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் நடுசூரங்குடி கற்பகவள்ளி 7 மாத கர்ப்பிணி, அன்பின்நகரம் சந்தியா, மேலப்புதூர் சின்னத்தம்பி, நேசமணி, படந்தால் கோபால், ரவிச்சந்திரன், செல்வி, ரெங்கராஜ், ஏழாயிரம்பண்ணை தங்கலட்சுமி, கண்ணன், நாராயணன், பாக்கியராஜ், கருப்பசாமி ஆகிய 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.
கர்ப்பிணி பெண் கற்பகவல்லி
கற்பகவல்லி உயிரிழந்த சோகத்தில் மருத்துவமனை வாசலில் காத்திருந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்களின் குடும்ப வறுமையை கூறியது கண்ணீரை வரவழைத்தது. படிக்கும் போதே புத்திசாலித்தனமாக இருந்த கற்பகவல்லி பிஎஸ்சி விலங்கியல் படித்திருக்கிறார். என் பிள்ளையவே தூக்கிக்கொடுத்துட்டு உட்காந்திருக்கேன். நல்லபடியா படிக்க வெச்சனே என்று கலங்கினார் கற்பகவல்லியின் தாயார்.
கொடுமை படுத்திய கணவன்
கடந்த மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டார் கற்பகவள்ளி, அவரை அழைத்துச் சென்றவர் அவரை திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்பதற்குக் கூட எந்த சாட்சியும் இல்லை. பி.எஸ்.சி விலங்கியல் படித்திருக்கும் கற்பகவள்ளியைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். குடும்ப வறுமை காரணமாகவும், அடிக்கடி குடித்துவிட்டு கணவர் தகராறு செய்வதால் பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வேலைக்கு அனுப்பியுள்ளனர். வயிற்றில் சிசுவோடு இப்படி உயிரிழந்து விட்டாளே என்று உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
3 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த வெடிவிபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கற்பகவல்லி மட்டுமல்ல பட்டாசு விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் அனைவருமே குடும்ப வறுமைக்காக உயிருக்கு ஆபத்தான இந்த வேலைக்கு வந்தவர்கள்தான். இந்த தொழிலாளர்களின் உயிரை பாதுகாக்க அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.