மோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே!
சிவகாசி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை நமக்கு ஒருபக்கம் இருந்தாலும், சில தமிழக அமைச்சர்களின் பேச்சுக்கள் அதைவிட பயங்கரமாகவும், நம் நாடி நரம்புகளில் தேசிய ரத்தம் பாய்ந்து ஓடுவது போலவும் இருக்கிறது.
கூட்டணி உறுதியாகாத வரை மேடைகளில் அதிமுக புகழ் பாடி கொண்டிருந்த அமைச்சர்கள், இப்போது பாஜக, பாமகவையும் லிஸ்ட்டில் சேர்த்துள்ளனர். அதிலும் மோடி நெடி அதிகமாகவே வர ஆரம்பித்துள்ளது.
நேற்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, "அதிமுக கூட்டணி ஒரு மங்களகரமான கூட்டணி. திமுகவுடையது மங்கிப்போன கூட்டணி. அது உதிர்ந்து போன கூட்டணி. ஒன்றுக்கும் உதவாத கூட்டணி.
தேசிய பற்றுள்ள மோடி நாட்டின் பிரதமராக திரும்பவும் வரவேண்டும். இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கின்ற கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். இந்திய இறையாண்மைக்காக உழைக்கின்ற அதிமுக, பாஜக, பாமக என்ற மக்கள் நலக்கூட்டணியை ஆதரியுங்கள்.
[Read more: சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா!]
மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது. இந்த விஷயத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லை, தமிழகத்தில் ஒவ்வொரு மக்களும், ஒவ்வொரு இளைஞனும் மோடியின் கரத்தை வலுவாக்க தயாராக இருக்கிறான்" என்றார் ஆவேசமாக.
இதே ராஜேந்திர பாலாஜிதான், கஜா புயலின்போது, "பத்து லட்சம் பேர் செத்தால்தான் வருவாரா மோடி என்று இதைவிட ஆவேசத்துடன் அன்று கேட்டார் என்பது நமக்கு ஏனோ இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வந்து போகிறது.