வைகோ நல்ல போராளி.. நம்ம பக்கத்து ஆளு.. அவருக்கு இப்படியா.. வருத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி!
சிவகாசி: வைகோவை அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ந்து தள்ளிவிட்டார். "வைகோ ஒரு சிறந்த போராளி, அவருக்கு தண்டனை தந்துள்ளது வருத்தமாக இருக்கிறது" என்று கவலையும் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசும் அமைச்சர்களில் முக்கியமானவர் ராஜேந்திர பாலாஜி. பால் கலப்படம் விவகாரத்தில் இருந்து மோடியை டாடி என சொல்லியது வரை இவரது பேச்சுக்கள் எல்லாமே இணையத்தில் வைரலாகியது.
எனினும் இவர், களங்கம் இல்லாதவர். மனசில் பட்டதை அப்படியே வெளிப்படையாகவே சொல்லிவிடுவார். அந்த மாதிரியேதான் போது வைகோ மீதான தீர்ப்பு குறித்தும் கருத்து கூறி உள்ளார். வைகோ குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பு சொன்னபிறகு, அதிமுக தரப்பில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை.
அதேபோல, இந்த வழக்கை தொடுக்க காரணமாக இருந்த திமுகவாலும் அதன் கூட்டணி கட்சியாலும் எதுவுமே பேச முடியாத நிலைமை. இதற்கு காரணம் ஒரே கூட்டணி அல்லது நீதிமன்ற தீர்ப்பை எப்படி விமர்சிப்பது என்பதாக கூட இருக்கலாம். இந்த விஷயத்தில் சீமான் கொந்தளித்த அளவுக்கு வேறு எந்த தலைவரும் கோபப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில்தான், வைகோ கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று சிவகாசியில் செய்தியாளர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டார்கள். அதற்கு அமைச்சர் "வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி, தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்றார்.
வைகோ பிரதான எதிர்கட்சியின் கூட்டணியில் உள்ளவர் என்று தெரிந்தும், ஒரு அமைச்சர், துணிந்து தனது கருத்தை சொல்லி உள்ளது பாராட்டத்தக்கதே!