டெல்லி: பேட்மிண்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருந்து அளிக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து பேட்மிண்ட்டன்விளையாட்டில் உலக அளவில் தற்போது 10ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்ட்டன் போட்டியில் பங்கெடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன் மூலம், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைச் செய்தார்.
இவருடைய பல சாதனைகளைப் பாராட்டி, 2013ஆம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. மேலும், 2015ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், சிந்துவுக்கு பத்மபூஷன் விருது வழங்க பரிந்துரை செய்துள்ளது.