ராஜாதி ராஜ.. ராஜ கம்பீர.. கோஹ்லிக்கு சாமரம் வீசும் டீன் ஜோன்ஸ்!
சிட்னி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகியுள்ள விராத் கோஹ்லிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். உலக கிரிக்கெட்டின் புதிய ராஜா, கோஹ்லி என்று சற்று ஓவராகவே புல்லரித்துப் பேசியுள்ளார் டீன் ஜோன்ஸ்.
கோஹ்லி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா இனி நிறைய வெற்றிகளைக் குவிக்கும் என்றும் சில எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் தூக்கி வீசியுள்ளார் ஜோன்ஸ்.
டோணி திடீரென ஓய்வு பெறுவதாக கூறி விட்டதால் கோஹ்லியை கேப்டனாக்கியுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா ஏற்கனவே இழந்து விட்ட நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. அதற்கு கோஹ்லி தான் தலைமை தாங்கப் போகிறார்.
இந்த நிலையில் கோஹ்லி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் ஜோன்ஸ். அவரது பேச்சிலிருந்து சில...
சரியான ஆளு பாஸ்
கோஹ்லிதான் இந்திய டெஸ்ட் அணிக்கு சரியான கேப்டன், பொருத்தமான கேப்டன். இந்தியாவுக்கு தலைமை தாங்குவது என்பது மிகப் பெரிய பணி, சவாலனாதும் கூட.
உலக கிரிக்கெட்டின் புரோக்கர் இந்தியா!
உலக கிரிக்கெட்டின் பவர் புரோக்கராக இந்தியா திகழ்கிறது. உலக கிரிக்கெட்டின் நிதியாளராகவும் அது சக்தி வாய்ந்ததாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நாட்டின் அணியின் தலைவர் பொறுப்பு என்பது மிகவும் நெருக்கடியானது, சவாலானது, கடுமையானது.
கற்பனை செய்து கூட பார்க்க முடியாது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு உள்ள நெருக்கடிகள், அழுத்தங்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் கோஹ்லி அதை சரியாக சமாளிப்பார் என்று நம்புகிறேன்.
அவர் வேற .. இவர் வேற
டோணியும் சரி, கோஹ்லியும் சரி முற்றிலும் நேர் மாறானவர்கள். எனவே கோஹ்லி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி எப்படி நடை போடப் போகிறது என்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சாந்தம்.. இவர் ஆக்ரோஷம்
டோணி அமைதியானவர், ஆனால் கோஹ்லியோ போர்க்குணம் கொண்டவர்.
நிறைய ஜெயிப்பாங்க பாருங்க
ஆனால் கோஹ்லி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா இனி நிறைய வெற்றிகளைப் பெறும் என்று நம்புகிறேன். இந்திய ரசிகர்களுக்குக் கோஹ்லி போன்ற கேப்டன்தான் தேவை.
டோணி இடம் மிகப் பெரியது
டோணி விட்டுச் சென்றுள்ள இடம் மிகப் பெரியது என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அதை கோஹ்லியால் சரியான முறையில் இட்டு நிரப்ப முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
வெயிட் பண்ணி வெளுப்பவர் டோணி
டோணி எதிராளிகள் தவறு செய்யும் வரை காத்திருப்பார். மிகப் பொறுமையாக காத்திருப்பார். தவறு செய்ததும் அதை சரியாக பயன்படுத்தி மேலே வந்து விடுவார்.
எடுத்த எடுப்பிலேயே நெத்தியடி
ஆனால் கோஹ்லி அப்படி இல்லை. முதல் பந்திலிருந்தே வெற்றிக்கு குறி வைப்பார். ஆக்ரோஷமாக போராடுவார். அந்த வகையில் மைக்கேல் கிளார்க் போலத்தான் கோஹ்லியும். அவர் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக இருப்பது அவரது கேப்டன்ஷிப்புக்கு பாதகமாக அமையாது என்றார் ஜோன்ஸ்.