கிளாஸ்கோ: 53 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் பெற்ற நைஜீரிய வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால், இந்தியாவிற்கு கூடுதலாக ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ எடையைத் தூக்கி நைஜீரியாவைச் சேர்ந்த சிகா அமலஹா(16) தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
பப்புவா நியூகினியாவைச் சேர்ந்த டிகா டோவா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். இந்திய வீராங்கனை சந்தோஷி மட்சா மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 4வது இடத்தை மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்வாதி சிங் 4வது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில். முதலிடம் பிடித்த சிகா அமலஹா மீது ஊக்க மருந்து குற்றச்சாட்டு எழுந்தது. போட்டிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அமலஹா தேர்ச்சி பெறத் தவறிவிட்டார். இதனால் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து இவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் இரண்டாம் இடத்தைப் பிடித்த வீராங்கனைக்கு முதலிடமும், முன்றாவது இடத்தைப் பிடித்த வீராங்கனைக்கு இரண்டாவது இடமும் தரப்பட்டது. இதனால், நான்காவது இடத்தைப் பிடித்த ஸ்வாதி சிங் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தார். இதன்மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் இந்தியாவுக்கு கிடைத்ததோடு, ஒரு கூடுதல் பதக்கமும் கிடைத்துள்ளது.
இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளன துணைத்தலைவர் சகாதேவ் யாதவ் தெரிவித்தார்.
இதன்மூலம் பளுதூக்குதலில் இந்தியா மொத்தம் 12 பதக்கங்கள் வென்றிருப்பதாக கூறிய யாதவ், இது முந்தைய இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் வென்றதைவிட அதிகம் என்று குறிப்பிட்டார். இந்திய பளுதூக்கும் வீரர்கள் 2006-ல் 9 பதக்கங்களும், 2010-ல் 8 பதக்கங்களும் வென்றது குறிப்பிடத்தக்கது.