டெல்லி: டெல்லியில் நடந்த பிசிசிஐ அண்டர் 19 பெண்கள் போட்டியில் ஒரே போட்டியில் மொத்தம் 136 வைடு பந்துகள் வீசப்பட்டு இருக்கின்றன. நாகலாந்து அணியும், மணிப்பூர் அணியும் மோதிய இந்த போட்டியில் இந்த 'சாதனை பவுலிங்' வீசப்பட்டு இருக்கிறது. இதில் நாகலாந்து அணி 42 வைடு பந்துகளும், மணிப்புர் அணி 94 வைட் பந்துகளும் வீசியது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நேற்று மணிப்பூர் மற்றும் நாகலாந்து அண்டர் 19 பெண்கள் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வடகிழக்கு அணியம், பிஹார் அணியும் புதிதாக அண்டர் 19 பெண்கள் அணியில் இணைந்திருப்பதை வரவேற்கும் விதத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. பிசிசிஐ வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த போட்டியை நடத்தியது.
இதில் முதலில் ஆடிய நாகலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது. ஆனால் இதில் மணிப்பூர் அணியால் மொத்தம் 94 வைட் பந்துகள் போடப்பட்டு இருக்கின்றன. கணக்கு படி மணிப்பூர் அணி 38 ஓவர்கள் வீசி இருந்தாலும் வைட் பந்துகளையும் சேர்ந்து 54 ஓவர்கள் போட்டு இருக்கிறார்கள்.
அடுத்து ஆடிய மணிப்பூர் அணி 27.3 ஓவரில் வெறும் 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகவும் மோசமாக ஆடிய இந்திய அணி எடுத்த இந்த 98 ரன்கள் ஸ்கோரில் 42 வைட் பந்துகள் மூலம் எடுக்கப்பட்டது ஆகும். இதில் பந்து வீசிய பல பேர் பிட்சுக்கு உள்ளே கூட பந்து வீசவில்லை என்பதுதான் இதில் மிகப்பெரிய கொடுமை. பிசிசிஐ உயர் அதிகாரிகள் இந்த போட்டியை காண வந்தது குறிப்பிடத்தக்கதுக்கு.
இந்த போட்டியில் நாகலாந்து 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து பிசிசிஐ உறுப்பினர் நாபா பட்டாச்சார்யா பேசுகையில் ''ஆரம்பத்தில் அனைவருமே அப்படித்தான் இருப்பார்கள். இவர்களுக்கு போகப் போக முறையான பயிற்சி அளிக்கப்படும். விரைவில் பெரிய அளவில் போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கும் பயிற்சி வழங்கப்படும்'' என்று கூறினார்.