டெல்லி: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது அவர் தம்பி சோரோவரின் மனைவி ஆகன்ஸ்கா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நேற்று டெல்லியில் இருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் இதற்கான மனுவை அளித்த ஆகன்ஸ்கா , தனது கணவர் சோரோவர், யுவராஜ் சிங், யுவராஜ் சிங்கின் அம்மா ஆகியோர் பெயரையும் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜின் தம்பி சோரோவர். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு ஆகன்ஸ்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆகன்ஸ்கா சென்ற வருடம் ஹிந்தியில் நடந்த பிக்பாஸ் 10 வது சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வட இந்திய முழுக்க டிரெண்ட் ஆனவர்.
பிக்பாஸ் போட்டியில் தமிழில் நடந்ததை போலவே இவர் ஹிந்தியில் பல வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் நிஜ வாழ்க்கையிலும் லைம் லைட்டிற்கு வந்திருக்கிறார். நேற்று டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கு திடீரென்று வந்தவர் தனது கணவர் சோரோவர், யுவராஜ் சிங், யுவராஜ் சிங்கின் அம்மா ஆகியோர் மீது வழக்கு தொடுக்கும்படி மனு அளித்தார்.
இந்த மனுவில், அவரது கணவர் சோரோவரும், யுவராஜ் சிங்கின் அம்மாவும் அடிக்கடி தன்னை துன்புறுத்துவதாகவும், மன ரீதியாக கஷ்டப்படும் வகையில் பேசுவதாகவும் கூறியுள்ளார். மேலும் வீட்டில் அடிக்கடி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது எதையுமே தட்டிக் கேட்காமல் யுவராஜ் சிங் அமைதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். யுவராஜ் சிங் அமைதியாக இருப்பது பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இவர்கள் மூவர் மீதும் பெண் கொடுமை தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால்தான் இவ்வாறு கொடுமைப்படுத்த படுவதாக மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவு வந்த பிறகு முடிவு எடுக்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.