சென்னை: கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றாலும் உலகம் முழுவதும் 'சச்சின் சச்சின்' என்று இப்போதும் ஒலிப்பதற்கு தனது தாயே காரணம் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ஒங்கி ஒலிக்கும் 'சச்சின் சச்சின்' மந்திரம் இன்று திரையரங்குகளில் ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பெயர் ஒரு மந்திரம் போல ஒலிப்பது குறித்து மனம் திறந்த சச்சின் " என்னுடைய பெயர் நான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இவ்வளவு பெரிய புகழை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவேயில்லை. இந்தப் புகழ் எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியை தருகிறது" என்றார்.
'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்பட பிரமோஷனுக்கான நிகழ்ச்சியில் சச்சின் பேசியதாவது : "என்னுடைய அம்மா தான் முதன்முதலில் எனது பெயரை மந்திரம் போல சொல்லிக் கொண்டே இருப்பார்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் வீட்டில் என்னுடைய சகோதரனுடன் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 4 அல்லது 5 வயது தான் இருக்கும். நான் ஒரு இடத்தில் நிற்காமல் துருதுருவென இருப்பேன். எப்போதும் பந்தை வைத்து விளையாடிக்கொண்டே இருப்பேன். எப்போதும் கையில் கிரிக்க்ட பேட் அல்லது டென்னிஸ் பேட் வைத்திருப்பேன்.
என்னுடைய அண்ணன் போடும் பந்தகளை இரண்டு பேட்டிலும் அடித்து தள்ளுவேன். அப்போது என்னுடைய அம்மா என்னை சச்சின், சச்சின் என்று அழைப்பார். இன்று உலகம் முழுவதும், "சச்சின் சச்சின்" பாடல் என்னுடைய வாழ்க்கைப் படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வெளிவருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது" இவ்வாறு சச்சின் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
சச்சின் கிரிக்கெட் ஆடிய காலகட்டங்களில், மைதானம் முழுக்க ஒரே நேரத்தில் 'சச்சின்ன்ன் சச்சின்' என்று ரசிகர்கள் அடி வயிறு அதிர, தங்கள் ஆதர்ஷ நாயகனை நோக்கி உணர்ச்சிமிகுதியில் கோஷமிடுவது வாடிக்கையாக இருந்தது. உலகின் எந்த மைதானத்தில் அவர் ஆடினாலும், இந்த கோஷம் அங்கெல்லாம் மந்திர பிரயோகமாக எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.