லண்டன்: ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐ.சி.சி. டெஸ்ட் அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன் மூலம் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1982 வரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகள் மட்டுமே டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருந்தன. அதே ஆண்டில் இலங்கைக்கும், 1992-ம் ஆண்டில் ஜிம்பாப்வே மற்றும் 2000-ம் ஆண்டில் பங்களாதேஷுக்கும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது ஐசிசி.
இந்நிலையில் லண்டனில் நேற்று நடைபெற்ற ஐசிசியின் கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக அங்கீகரித்து முடிவெடுக்கப்பட்டது.
ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் இனி விளையாட முடியும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.