மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வேறு எதுவும் போட்டிகள் ஏற்படுத்தப்படவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த, உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி, இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இங்கிலாந்திடம் சொற்ப ரன்களில் தோற்று, இந்திய அணி கோப்பையை நழுவவிட்டாலும் அணி வீரர்களுக்கு சிறப்பான பாராட்டுகளும் பரிசுகளும் கிடைத்தன.
அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேப்டன் மிதாலி ராஜ், ' ஐபிஎல் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதாகவும், மகளிர் அணிக்கு மேலும் புதிய கிரிக்கெட் போட்டிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், நாட்கள் பல கடந்த நிலையில், இதுவரை இந்திய மகளிர் அணிக்கு, எந்த புதிய போட்டிகளும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மகளிர் பிசிசிஐ சார்பாக, இதுபற்றி ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.
அதேசமயம், கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ' அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும், மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்காக, தற்போது பயிற்சி எடுத்து வருகிறோம்' என தெரிவித்தார்.
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இருப்பதைப் போல பெண்களுக்கும் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.