மும்பை: இந்திய அணி தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தொடர்ந்து செயல்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் அறிவித்துள்ளார்.
கும்ப்ளே பதவிக்காலம் இந்த மாதம் முடியவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு கும்ப்ளேவும் கூட விண்ணப்பித்திருந்தார்.
சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்முக தேர்வு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், கும்ப்ளே பதவிக்காலத்தை நீடிக்கச்செய்ய இந்திய கிரிக்கெட் நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளது. இம்மாதம் 20ம் தேதி லண்டனிலிருந்து மே.இ.தீவுகளுக்கு இந்திய அணி சுற்றுப் பயணத்திற்காக புறப்படுகிறது. ஜூலை 10ம் தேதி இந்திய அணி தாயகம் திரும்ப உள்ளது.
அந்த சுற்றுப் பயணம் முடிவடையும் வரை கும்ப்ளேவே பதவியில் தொடருவார் என்று, இந்திய கிரிக்கெட் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் இன்று தெரிவித்தார். அதேநேரம், கும்ப்ளே அனுமதியை இதுவரை பெறவில்லை என்றும் அவருக்கும் சம்மதம் என்றால் கோச் பதவியில் இக்காலகட்டம் வரை தொடருவார் எனவும் வினோத் ராய் கூறியுள்ளார்.
அதேநேரம், ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு வந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் எப்போது நேர்முக தேர்வு நடைபெறும் என்ற விவரம் வெளியாகவில்லை.